வரும் 2021 ஐபிஎல் சீசனுக்கான ஏலம் விரைவில் நடக்க உள்ளது. இதற்கு ஆயத்தம் ஆகும் விதமாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் உள்ள வீரர்களை தக்கவைப்பதும், கழட்டி விடுவதாகவும் உள்ளன. பெரும்பாலான அணிகள் கடந்த சீசனில் முறையாக விளையாடாத வீரர்களை வெளியேற்றியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலான வீரர்களை தக்கவைத்துக் கொண்டு அணிக்கும் சுமையாக இருக்கும் சிலபேரை மட்டுமே வெளியேற்றியுள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் இந்த செயல்பாட்டை வெகுவாக பாராட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் காம்பீர்.
கேதார் ஜாதவ், முரளி விஜய், பியூஷ் சாவ்லா, மோனு குமார் என ஐந்து வீரர்கள் சென்னை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களை தவிர ஷேன் வாட்சன் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். அணியில் பெரிய மாற்றங்களை செய்யாத சென்னை அணியின் வியூகம் சிறப்பு என சொல்லியுள்ளார் காம்பீர்.
“இது தான் தோனியின் ஸ்பெஷாலிட்டி. தோனி தேவைக்கு ஏற்ப முடிவு எடுப்பவர் என்பதை நான் எப்போதும் சொல்வேன். அது தான் இப்போதும் நடந்துள்ளது. மற்ற அணிகள் எல்லாம் எதிர்காலம் குறித்து யோசிக்க, தோனி இந்த சீசனை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளார். இந்த சீசனில் சென்னை அணியில் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டுமென எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் அது வேண்டாத வேலை. விளையாடும் பதினோரு வீரர்கள் மட்டுமல்லாது டிரெஸ்ஸிங் ரூமில் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் வீரர்களுக்கும் சேர்த்து யோசித்துள்ளது சென்னை அணி. அங்குதான் தோனியின் தொழில்முறை கிரிக்கெட் யுக்தியும் தெரிகிறது” என காம்பீர் தெரிவித்துள்ளார்.