விஜ்ய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.
எண்டமோல் ஷைன் இந்தியா, சினி 1 ஸ்டூடியோஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் நிறுவனங்கள் இணைந்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனங்கள் மாஸ்டரை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையைப் கைப்பற்றியிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு நடிகர் விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடித்து ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது மாஸ்டர் திரைப்படம்.
எண்டமோல் ஷைன் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் ரீஜ் இதுகுறித்துப் பேசும்போது, “மாஸ்டர் சிறந்த திரைப்படம், அட்டகாசமான நடிப்பு மற்றும் பவர்ஃபுல்லான திரைக்கதை என ரசிகர்களை கவர்ந்து இழுத்துவிட்டது. மேலும், கொரோனா அச்சுறுத்தலின் போதும் கூட, பாக்ஸ் ஆபீஸில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது நினைக்கூறத்தக்கதாக இருக்கும். மாஸ்டரின் இந்தி ரீமேக்கை கைப்பற்றியது எங்களுக்கு நம்பமுடியாத பெருமையை தருகிறது. இந்தி ஆடியன்ஸ்களுக்கு ஏற்றமாதிரி இந்தப் படத்தை மீண்டும் உருவாக்க இருக்கிறோம்” என்றார்.
சினி 1 ஸ்டுடியோவின் முராத் கெதானி பேசும்போது, “ மாஸ்டர் ஒரு பிரம்மாண்ட படைப்பு. இது வெளியான ஒரு நாளுக்குள் தனது இடத்தை நிலைநிறுத்தியுள்ளது மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சினி 1 இல்,சிறந்த படைப்புகளை கொண்ட சினிமாவை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். அதன்படி, மீண்டும், இந்தி மொழியில் இந்த படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்! ” என்றார்.
மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான செவன் ஸ்கிரீன் எஸ்.எஸ்.லலித்குமார் “ திரையுலகிற்கான ஒட்டுமொத்த வெற்றியாக திகழ்கிறது மாஸ்டர். ஒரு நல்ல கதையும், சிறந்த நடிகரும் எப்போதும் ரசிகர்களுடன் எளிதில் இணைந்துவிடுகிறார்கள். மாஸ்டர் முழு டீமுக்கும் என்னுடைய வாழ்த்துகள். இந்தி ரீமேக்கில் எண்டமோல் ஷைன் இந்தியா மற்றும் சினி 1 நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அதோடு, மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதை நம்புகிறேன்” என்று முடித்தார்.