உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிக்கட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் விழாவில் பங்கேற்கின்றனர்.
வாடிவாசலில் இருபுறத்திலும் 300 மீட்டர் நீளத்திற்கு 8 அடி உயரத்தில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் போட்டியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சிறந்த காளை மற்றும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. கார், இருசக்கர வாகனம், தங்க காசுகள், சைக்கிள், பீரோ, கட்டில், அண்டா, டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. 20 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும்வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பார்வையாளர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்தபிறகு தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 150 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் இங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். காயம்பட்டவர்களை அழைத்து செல்ல பத்து 108 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளன. மேலும் 5 தீயணைப்பு வாகனங்களுடன் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 4 மணிவரை நடைபெறும்.