இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை பதிவாகியுள்ளது. அதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள ஏராளமான கட்டடங்கள் இடிந்துள்ளன. இடிபாடுகளுக்குள் சிக்கி பல நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
நிலநடுக்கம், மஜீனே பகுதிக்கு 6 கிலோ மீட்டர் வடகிழக்கே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனேசிய பேரிடர் முகமை அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அச்சத்தினால் அவரவர் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பாக கூட அதே மாவட்டத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு பல குடியிருப்புகளை பாதிக்க செய்துள்ளது. கடந்த 2018 இல் இதே தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி அலைகள் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.