அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
சிறந்த வீரருக்கு காரும், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு காங்கேயம் பசு மாடும் வழங்கப்படும் என பாலமேடு ஜல்லிக்கட்டு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 783 காளைகள் களம் காண்கின்றன. 651 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
காயம்பட்டவர்களை அழைத்துச் செல்ல 108 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. காளைகள் காயம் அடைந்தால் மருத்துவமனை கொண்டு செல்ல கால்நடை ஆம்புலன்ஸும் தயார் நிலையில் உள்ளன. கொரோனா தடுப்பு விதிப்படி காளைகளுடன் உரிமையாளர், உதவியாளர் என இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக பாதுகாப்பு பணியில் 2,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.