டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ஆம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து 50 நாட்களுக்கும் மேலாக விவசாய அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. விவசாயிகளுடன் மத்திய அரசு 8 முறை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 9-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
முன்னதாக விவசாயிகள் பிரச்னை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவில் இடம்பெற்றிருந்த பாரதிய கிசான் சங்க தலைவர் பூபேந்தர் சிங் மான் திடீரென விலகினார். எப்போதும் விவசாயிகள் பக்கமே இருக்க தான் விரும்புவதாகவும் எனவே உச்சநீதிமன்ற குழுவில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ள விவசாயிகள், உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு முன்பு ஆஜராகமாட்டோம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று 9ஆம் கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
எனவே மீண்டும் 10ஆம் கட்டமாக விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை வருகிற 19ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.