அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்ட தொடங்கியுள்ளது ஈரான். இது, அமெரிக்காவுக்கு அழுத்தம் தரும் விவகாரமாகவே பார்க்கப்படுகிறது.

ஈரான் யூரேனியத்தை செறிவூட்டி, அளவுக்கு அதிகமான அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போதும் தெரிவிக்கும் குற்றச்சாட்டு. இதனால்தான் அந்நாட்டுடனான அணுசக்தி உடன்பாட்டை ரத்து செய்து பொருளாதார தடைகளை விதித்தார். இந்தத் தடையால் ஈரான் – அமெரிக்கா சண்டை ட்ரம்ப் காலத்தில் உச்சம் பெற்று வந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்த நிலையில், புதிய அதிபராக தேர்வான ஜோ பைடன் இம்மாதம் பதவியேற்கும் சூழலில், ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திட வைக்க முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, முழு இணக்கத்துடன் ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் அந்த நாட்டு உடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

image

ஆனால், தற்போது ஈரான் இதனை கண்டுகொள்ளவில்லை. மேலும், 2015-ல் உலக நாடுகளுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்ட தொடங்கியுள்ளது. தற்போது 20 சதவீத அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டி வருகிறது.

கோம் (Qom) பகுதியில் நிலத்துக்கடியில் இருக்கும் ஃபோர்டோ அணுசக்தி நிலையத்தில் இந்த செறிவூட்டல் பணி நடந்துகொண்டிருப்பதாக ஈரான் அரசின் செய்தி தொடர்பாளரே மெஹர் செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை சர்வதேச அணுசக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ) இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இந்த செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல், அண்டை நாடான இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின், “அணுஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” என்று ஈரானை எச்சரித்துள்ளார். ஈரானின் இந்த விதி மீறலானது ஜோ பைடனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் முயற்சியாகும் என உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.