நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கியது.
ஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், இயக்குநர் அறிமுக இயக்குநர் ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லுசபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘புரியாத புதிர்’, ‘விக்ரம் வேதா’, ‘கைதி’ உள்ளிட்டப் படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
நடிகர் சந்தானம் ‘பேரிஸ் ஜெயராஜ்’ என்ற படத்தில் நடித்து முடித்த நிலையில், இந்த புதியப்படத்தில் இணைந்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று கும்பகோணத்தில் தொடங்கிய நிலையில், படம் தொடர்பான படப்பிடிப்புகள் திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளில் நடக்க இருக்கின்றன.
இப்படத்தைப் பற்றி ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், “இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவும் பொருந்தியிருக்கிறது. காமெடி கதைக்களம் என்றாலும் கூட தந்தை – மகன் இடையே நடைபெறும் காட்சிகள் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் உணர்வு பூர்வமான பிணைப்பை ஏற்படுத்தும். ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்துவந்த உணர்வுப் போராட்டங்களையும் இந்தப்படம் பிரதிபலிக்கும். அதனால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப்போக முடியும்.
இன்றைய அரசியல் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான ஜனரஞ்சகமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்படுகிறது. ஹீரோயினாக புதுமுகத்தை அறிமுகம் செய்கிறோம்” என்றார்.