ஃபேஸ்புக், யூடியூப்பில் லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக்கூறி செயலிகள் மூலம் கோடிக்கணக்கில் பணமோசடி செய்த ஆசாமிகள் குறித்து சென்னை சைபர் காவல்நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

‘மீ சேர்’ மற்றும் ‘லைக் சேர்’ என்ற பெயரில் செயலியை ஆன்லைன் மோசடி கும்பல் உருவாக்கியுள்ளது. இந்த செயலியை ‘ப்ளே ஸ்டோர்’ மூலம் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதற்கென தனியாக லிங்குகள் மூலமாகத் தான் பதிவிறக்கம் செய்யமுடியும். மீ சேரில் இலவசமாக 3 யூடியூப் ஃபேஸ்புக் வீடியோக்களுக்கோ லைக் செய்து சப்ஸ்கிரைப் செய்தால், ஒரு லைக் மற்றும் சப்ஸ்கிரைப்பிற்கு 8 ரூபாய் சம்பாதிக்கலாம் என்று இந்த மோசடி கும்பல் விளம்பரம் செய்கிறது. இந்த பணமானது செயலியில் பணம் சேமித்து வைக்க உள்ள வாலட்டில் சேரும். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றால், அப்டேட், ஏங்கர், இண்டெர்னட் செலிபிரிட்டி, ஆஸ்கர், கிங்க் என்ற பெயரில் திட்டங்கள் உள்ளன.

image

இதில் சேர 1000 ரூபாய் முதல் 60,000 வரை செயலிக்கு பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தி திட்டத்தில் சேர்ந்தால், ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்தால் கொடுக்கப்படும் பணம் என்பது ஒரு வீடியோவிற்கு 8 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். குறிப்பாக ‘கிங்’ என்ற திட்டத்தில் சேர்ந்தால் ஒரு நாளைக்கு 100 வீடியோக்களை லைக் மற்றும் சப்ஸ்கிரைப் செய்யலாம். ஒவ்வொரு லைக்கிற்கும் 18 ரூபாய் சம்பாதிக்கலாம். அதன்படி ஒரு நாளைக்கு ஆயிரத்து 800 ரூபாயும், மாதம் 54 ஆயிரம் ரூபாய் வரையிலும் சம்பாதிக்கலாம் என இந்த மோசடி செயலியில் பட்டியலிட்டுள்ளனர். இதனைப் பார்த்து ஆசைப்பட்டு பலரும் செயலியில் பல திட்டங்களில் பணத்தை செலுத்தியுள்ளனர்.

image

முதல் இரண்டு, மூன்று நாட்களில் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் செயலி செயலிழந்து விடுவதை கண்டு பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆப்பை செயலிழக்க செய்தவுடன் வேறு பெயரில் இந்த லைக், ஷேர் மோசடியை ஆரம்பித்துள்ளனர். ஏமாந்தவர்கள் செலுத்திய பணமானது, சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் வங்கியில் உள்ள ஒரு கணக்கிற்கு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பாதிக்கப்பட்டவரான சென்னையைச் சேர்ந்த சுரேந்தர் தெரிவித்தார்.

image

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் சைபர் குற்றப்பிரிவிலும் இதுதொடர்பாக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்த செயலி மூலம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பேர் ஏமாந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான விசாரணை தீவிரமாகி உள்ள நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்த அரசு இது போன்ற செயலிகளையும் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.