வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை ஓய மாட்டோம் என அறிவித்துள்ள விவசாயிகள், போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 11-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடுங்குளிரிலும் எல்லைகளிலேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி பலரும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

image

சிங்கு எல்லையில் போராட்டக்களத்திற்கு வருகை தந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், விவசாயிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் கேல் ரத்னா விருதை திருப்பிக் கொடுத்துவிடுவேன் என அவர் எச்சரிக்கை விடுத்தார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற 5 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. இதனையடுத்து வரும் 9ஆம் தேதி அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

image

இந்நிலையில், விவசாய சங்கத்தினர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வது மட்டுமே தீர்வு என்றும், அதுவரை போராட்டம் தொடரும் எனவும் விவசாய சங்கங்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு எழுதித்தர தயார் எனக் கூறியுள்ள வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, எதிர்க்கட்சிகளே விவசாயிகளை தூண்டிவிடுவதாக சாடியுள்ளார். எனினும் அரசின் சமரசங்களை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள் வரும் 8ஆம் தேதி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

image

தேசிய நெடுஞ்சாலைகளை மறிக்கும் வகையில் போராட்டம் தீவிரமாக இருக்கும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர். விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இவைதவிர பல்வேறு மாநில விவசாய சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்திருப்பதால் செவ்வாய்கிழமை போராட்டம் மிக தீவிரமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு புறம் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஆறு மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கொண்டு வரும் பணியில் பஞ்சாப் மாநில விவசாயிகள் இறங்கி இருக்கிறார்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.