மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் டெல்லி சலோ போராட்டம் 9-வது நாளை எட்டியிருக்கிறது. விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு தரப்பில் இரண்டுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதற்கு இந்தியா தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் நிகழ்வு ஒன்றில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, “விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும்’’ என்று பேசியிருந்தார். மேலும், போராட்ட சூழல் கவலையளிப்பதாக இருக்கிறது எனவும் ட்ரூடோ கருத்துத் தெரிவித்திருந்தார்.

Also Read: விவசாயிகள் போராட்டம்; `உரிமைகளைப் பாதுகாக்க கனடா துணையிருக்கும்!’ – ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு

இதற்கு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து, இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வெளியுறவுத் துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு கனட தூதருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்

இதுதொடர்பாக வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கனட தூதருக்கு சம்மன் வெளியுறவுத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு, அவரிடம் நேரில் இந்த விவகாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. `கனட பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசிவரும் கருத்துகள் மூலம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கனட தூதரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் இதுபோல் தொடர்ந்து பேசிவந்தால், அது இருநாட்டு உறவுகளில் கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.