புதுக்கோட்டை அருகே தொடர்வண்டியிலேயே பயணித்திடாத அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்வண்டி குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பள்ளியின் வகுப்பறை சுவற்றில் தொடர்வண்டி போல் ஓவியம் வரைந்து தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ள நிகழ்வு காண்போரை வியக்க வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள லெக்கணாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 230 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த அரசு பள்ளி தரம் வாய்ந்த தனியார் பள்ளிகளுக்கு நிகராக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 2011ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார் ஆண்டனி. மாணவர்களுக்கு கல்வி போதிப்பதை கடந்து ஆசிரியர்கள் ஒன்றிணைத்து ஒழுக்கத்தையும் இரக்க குணத்தையும் கற்றுத்தருவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அந்த பள்ளி வளாகத்திலேயே ‘தருவோம் பெறுவோம்’ என்ற வாசகத்தோடு ஒரு பெட்டி வைத்து அதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படாத பொருட்களை வைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர் வண்டியில் கூட பயணிக்காத குக்கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் மட்டுமே பயிலும் தங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்வண்டி குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும் அதில் உள்ள வசதிகள் குறித்து எளிமையாக தெரிந்து கொள்ளும் வகையிலும் அந்தப் பள்ளியின் வகுப்பறை சுவற்றில் தொடர்வண்டி போல் தத்ரூபமாக வரைந்து, பள்ளி திறந்ததும் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளனர் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரும் பள்ளி ஆசிரியர்களும்.
தற்போது உண்மையான தொடர்வண்டி போலவே காட்சியளிக்கும் அந்த வகுப்பறை அருகே ஆசிரியர்கள் ஓடிச்சென்று தொடர்வண்டியில் ஏறுவது போலவும், தொடர்வண்டி அருகே நின்று பேசிக் கொண்டிருப்பது போலவும், வழியனுப்புவது போலவும் ஆசிரியர்களின் செய்முறை காட்சிகள் காண்போரை வியக்க வைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆண்டனி கூறுகையில் “தங்கள் பள்ளி மாணவர்கள் பெரும்பாலோனோர் தொடர்வண்டியை இதுவரை பார்த்தது கூட கிடையாது. மாணவர்கள் யாரும் இதுவரையில் தொடர் வண்டியில் பயணித்ததில்லை. தொடர்வண்டி பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உதவும் வகையிலும், தொடர் வண்டியில் உள்ள மிக முக்கியமான எமர்ஜன்ஸி விண்டோ எப்படி பயன்படுத்த வேண்டும் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், தொடர்வண்டியின் உள்ளிருக்கும் பெட்டிகளின் வகைகள் அதன் அமைப்பும் பற்றியும் மாணவர்கள் வகுப்பறையில் நுழையும்போது தொடர் வண்டியில் பயணம் செய்யும் ஒரு உணர்வை உருவாக்க வேண்டும் என்பதற்காக பள்ளி வகுப்பறை சுவர்களில் தொடர்வண்டி போல் தத்ரூபமாக ஓவியம் வரைந்து உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், “தமது பள்ளியில் புதுமைகளை புகுத்தும் விதமாகவும் மாணவர்கள் விரும்பி செல்லும் இடமாக மாற்றுவதற்காகவும் மாணவர்களுக்கு ஓவியக் கலையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இவ்வாறு செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டார்.
– சுப.முத்துப்பழம்பதி, புதுக்கோட்டை நிருபர்.