மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப தேர்வாகியுள்ளது. ஆஸ்கர் கிடைக்கிறதோ, இல்லையோ சிறந்த வெளிநாட்டு மொழி படத்துக்கான ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்வாகியிருப்பதே மலையாள சினிமா உலகிற்குக் கிடைத்த ஒரு மகுடம்தான் ‘ஜல்லிக்கட்டு’.

மலையாளத்தில் வெளியான ஒரு படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ளதை தமிழ் சினிமா ஆர்வலர்களும் கொண்டாடி வருகிறார்கள் என்பதுதான் சற்றே நெகிழ்ச்சியான விஷயம். அது வெறும் ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயரால் ஏற்பட்டு அல்ல; ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயர் சர்வதேச அளவில் செல்வது மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால், அதையும் தாண்டி, சரியான கதைத் தேர்வுக்கும், மிகச்சரியாக எடுக்கப்பட்ட விதத்தை மெச்சுயும்தான் தமிழ் சினிமா ஆர்வலர்கள் கொண்டாடுகின்றனர்.

image

‘பிரேமம்’ தொடங்கி ‘கும்பளாங்கி நைட்ஸ்’ வரை கடந்த சில ஆண்டுகளாக மலையாளத்தில் வெளியாகும் நல்ல படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடத் தவறுவதேயில்லை. அப்படி என்னதான் காரணம், மலையாள சினிமாக்கள் மீதான இத்தனை காதலுக்கு. மிக முக்கியமான காரணம், மிகக் குறைவான பட்ஜெட்டில் சிறந்த படங்களை நிறையவே கொடுத்துவிடுகிறார்கள் என்பதே. இதயத்தை உருக வைக்கும் கதை, ஆச்சர்யப்படுத்தும் திரைக்கதை, மிகச் சிறந்த இயக்கம், மிகப் பொருத்தமான கதாபாத்திர தேர்வுகள் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ‘கிளாசிக்’ என்று சொல்ல வைக்கும் நடிப்பு. இவைதான் கேரளா சினிமாக்கள் மீதான ஈர்ப்புகளுக்கு காரணங்கள். மொக்கையான படங்களும் வராமல் இருக்காது. எல்லாவற்றையும் தாண்டி, ‘என்னாவொரு படம்ப்பா இது!’ என்று ஒரு வாரத்திற்கு மேலாவது நம் மனதை நீங்காமல் நிலைத்திருக்கும் பல படங்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

image

விஷூவல் சினிமா:

மலையாள சினிமாவில் ஒரு மைல்கல் போன்றதொரு படம்தான் ‘ஜல்லிக்கட்டு’. இது என்ன வகையான படம் என்று கேட்டால், முதலில் எல்லோருமே யோசிக்காமல் ‘விஷூவல் எஃபெக்ட்’டைதான் ஹைலைட்டாக சொல்வார்கள். அப்படியொரு உலகத் தரமான காட்சிகளும், சவுண்ட் எஃபெக்ட்டும் இருக்கும். இந்தப் படத்தை திரையரங்கு தவிர வேறு எதில் பார்த்தாலும் இந்த பேரனுபவத்தை நம்மால் உணர முடியாது.

சவுண்ட் எஃபெக்ட் பொறுத்தவரை பின்னணி இசையில் கருவிகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிட்டு குரல் ஓசைகள் மூலமே இசைக்கோர்வைகளை உருவாக்கி மிரட்டி இருக்கிறார்கள். டைட்டில் கார்டு வரும்போது வரும் ‘ஜிஜிஜி…’ என்ற பின்னணி இசை அதற்கு ஒரு சான்று. படம் துவங்கியதும் ‘புஸ்ஸ்… புஸ்ஸ்ஸ்…’ என ஒலிக்கும் மனிதர்களின் மூச்சொலி, ‘டக்… டக்…’ என்கிற கடிகார முள் ஓசை, கறி வெட்டும் சத்தம், கறி அரியும் கசாப்பு அருவாளை கூர்தீட்டும் ஓசை என ஒலியே அந்த வாழ்விடத்திற்கு நம்மை நெருக்கமாக கொண்டுச் செல்கிறது. ஆகமொத்தம், ஒளிப்பதிவில் கிரிஷ் கங்காதரனும், பின்னணி இசையில் பிரசாத் பிள்ளையும் அப்படியொரு மேஜிக்கை நிகழ்த்தி காட்டி இருக்கிறார்கள்.

image

கதைப் பற்றி சொல்வதற்கு முன்பே இதனையெல்லாம் கூறக் காரணம், அப்படியொரு அட்டகாசமான சினிமா அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் விஷூவலில் கொடுக்கும். இந்தப் படத்தை எப்படி கேமராவில் எடுத்திருப்பார்கள் என்று வியந்து வியந்துபோகும் அளவிற்கு அந்த அனுபவம் இருக்கும். ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தின் மூலம் மிகவும் பேசப்படக்கூடிய ஒரு இயக்குநராக மாறினார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. ‘ஜல்லிக்கட்டு’ அவருக்கு ஏழாவது படம்.

‘மாவோயிஸ்ட்’ சிறுகதையே மூலக்கதை:

ஹரீஷ் எழுதிய ‘மாவோயிஸ்ட்’ என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டதுதான் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம். மலையாள இயக்குநர்கள் கதையாசிரியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை நாம் இங்கு நினைவு கூரவேண்டும். இதயத்தைத் தொடும் படங்களை அவர்கள் கொடுப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

இந்தப் படத்தில் செம்பன் வினோத் ஜோஸ், ஆண்டனி வர்கீஸ் ஆகிய இருவரும்தான் ஓரளவு தெரிந்த முகங்கள். மற்றபடி அந்த கிராமத்தில் உள்ளவர்களையே நடிக்க வைத்திருந்தால் எப்படி இருக்கும் என்ற அளவில் கதாபாத்திரங்களின் தேர்வு இருக்கும். செம்பன் வினோத், ஆண்டனி வர்கீஸ் கூட பெரிய ஸ்டார் மதிப்பு கொண்ட நடிகர்கள் இல்லை.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கசாப்புக் கடை வைத்துள்ளார் வர்கி (செம்பன் வினோத் ஜோஸ்). அவரின் உதவியாளர் இருக்கிறார் ஆண்டனி (ஆண்டனி வர்கீஸ்). அந்தக் கடையின் இறைச்சி சுற்றுவட்டாரத்தில் அவ்வளவு ஃபேமஸ். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வர்கி கடையில் இருந்துதான் இறைச்சி செல்லும். வர்கியின் தங்கை சோபி (சாந்தி பாலச்சந்திரன்) மீது ஆண்டனிக்கு காதல். வர்கி கடையில் வேலைபார்த்த குட்டச்சன், ஆண்டனியால் விரட்டப்பட்டதால் அவர்கள் இருவருக்கும் இடையே பகை. இந்த நான்கு பேர்தான் முக்கியக் கதாபாத்திரங்கள்.

image

ஒருநாள் அதிகாலையில் கசாப்புக் கடைக்கு வந்த எருமை, உயிர் பயத்தில் தப்பிக்கிறது. மூர்க்கமான அந்த எருமை ஊரில் உள்ள கடை, சர்ச், கட்சிக் கொடி, தோட்டம் என மொத்தப் பகுதிகளையும் கபளீகரம் செய்து ஊரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. ஊரே திரண்டு அந்த எருமையை பிடிக்க படையெடுத்துச் செல்கிறார்கள்.

ஊர்மக்கள் எருமையை பிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் சுருக்கமான கதை. ஆனால், இந்தக் கதைக்குள் மனித குலத்தை பற்றிய ஒரு தத்துவத்தை உணர்த்த முயற்சித்து இருக்கிறார்கள். அதாவது, எத்தனை நாகரீக நிலையை மனிதன் எட்டினாலும் மனிதன் இன்னும் தன்னுடைய மிருக குணத்தை விட்டுவிடவில்லை என்பதுதான் கதையின் அடிநாதம். ஒரு சிறிய கதைக் களத்தை எடுத்துக்கொண்டு, அதில் உணவு அரசியல், இயற்கை மீதான மனிதர்களின் ஆதிக்கம், மனிதர்களுக்கு இடையிலான பகை உள்ளிட்ட பல விஷயங்களை போகிற போக்கில் பேசியிருக்கிறார் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

நேர்த்தியான கிளைக்கதைகள்:

மிகவும் பரப்பரப்பாக ஜெட் வேகத்தில் செல்லும் ஒரு திரைக்கதையில் இடையிடையே குட்டிக் குட்டியான அழகான, நகைச்சுவையான கிளைக்கதைகள் வந்துவந்து போகும். கதையின் தன்மையை விட்டு விலகிச் செல்லாமல், அத்தனை கிளைக் கதைகளும் பொருத்தமாக இருக்கும். திரைப்படம் பார்ப்பவர்களுக்கும் கதையைத் தொய்வில்லாமல் எடுத்துச் செல்வதற்கும் அது உதவும். விலங்குகள் வாழ்ந்துவந்த அந்த மலைப் பிரதேசத்தை மனிதர்கள் ஆக்கிரமித்த கதையைச் சொல்லும் தாத்தாக்கள் ஒரு பக்கம், குட்டச்சனுக்கும் ஆண்டனிக்கும் நடக்கும் கௌரவ, முன் பகை சண்டை ஒரு பக்கம், ஆண்டனிக்கும் வர்கீயின் தங்கைக்கும் இடையேயான காதல் ஒருபக்கம் என எல்லாமே கதையை ஒட்டியவைதான். படம் முழுக்க அபூர்வமான மனிதர்கள் விரவிக் கிடக்கிறார்கள்.

கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியாக மனிதர்களின் குணங்கள் எத்தகையது என்பதை வெளிச்சம் போட்டு காட்ட முயற்சித்திருப்பார் லிஜோ ஜோஸ். அதற்கு ஒரு சான்றுதான் இந்தக் காட்சி… கசாப்பு கடையில் இருந்து தப்பிய எருமை, விவசாய வயல்களில் புகுந்து நாசம் செய்து கொண்டிருக்கும். தப்பியோடிய எருமையை தேடி அந்த ஊர் ஆண்மக்கள் படையென கூட்டமாக செல்வார்கள். எருமை மாட்டை மோசமான வார்த்தைகளில் திட்டிக்கொண்டே அவர்கள் செல்வார்கள். அப்போது அந்த வழியில் மாட்டின் கோமியத்தை சங்கு என்ற பெரியவர் பிடித்துக் கொண்டிருப்பார். பின்னர் அவ்வழியே எருமையை துரத்திச் செல்லும் இளைஞர்களிடம், “பாவப்பட்ட அந்த ஜீவராசியை ஏன் துன்புறுத்த நினைக்கிறீங்க. மனிதனைப் போல் அவையும் உயிருள்ள ஒரு ஜீவராசிதானே” என்று கெட்ட வார்த்தை பேசுபவருக்கு அறிவுரை கூறுவார் பெரியவர் சங்கு. ஆனால், சற்று நேரத்திலே தன்னுடைய நிலத்தில் பயிரிடப்பட்டிருப்பதை எருமை நாசம் செய்து சென்றதை பார்த்ததும், உலகில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளை கொண்டு திட்டுவார். இதில் மறைமுகமாகவும் நேரடியாகவும் நிறைய விஷயங்களை உணர்த்தியிருப்பார்கள்.

image

மிருகம் ஆகும் மனிதன் – இதுதான் கதைக்கரு

மனிதன் எப்படி மிருகத்தன்மைக்கு மாறுகிறான் என்பதை அவ்வளவு கலைநேர்த்தியான ஒரு காட்சி மூலம் உணர்த்தியிருப்பார் இயக்குநர். அதனை போஸ்டர்களில்கூட நாம் பார்த்திருப்போம். அதாவது எருமையின் கால் தடம், அருகிலே மனிதனின் காலம் தடம் இருக்கும். எருமையின் கால் தடத்தை முந்தி மனிதக் கால்தடம் இருக்கும். அந்தக் காட்சிக்கும் பிறகு எருமையை பிடிக்கும் படலம் போய் மனிதர்களுக்கு இடையே இருக்கும் மூர்க்க குணம் வெளிப்பட ஆரம்பிக்கும். இறுதிக்காட்சியில், எருமையை பிடிக்கும் நோக்கில் அதன் மேல் மனிதர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்து ஒரு பிரமிடு போல் கிடப்பார்கள். அந்தக் காட்சி நிச்சயம் நம்மை மிரளவைக்கும். உணவுச் சங்கிலியை, ஆதிமனிதனின் வேட்டை வாழ்வை அந்த காட்சி உணர்த்தும்.

‘ஜல்லிக்கட்டு’ படம் முழுக்க மனிதர்களின் மோசமான குணாதிசயங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டே சற்று மனதை நெருடுகிறதுதான். ஆனால், சமகால உலகின் மீதான விமர்சனமாக எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். இயக்குநரின் நோக்கம், நாம் நமக்குள் இருக்கும் மிருக குணத்தை, போட்டி மனப்பான்மையை, ஆதிக்க உணர்வை விட்டுவிட்டு மனிதர்களாக வாழவேண்டும்; இல்லையேல் நாமும் மிருகம்தான் என்பதை உணர்த்தவே எடுத்திருப்பதுபோல் தோன்றுகிறது. குறிப்பாக, மனிதர்களுக்குள் இருக்கும் ‘மாப்’ கலாச்சாரம், அதாவது கும்பல் மனநிலையை தோலுரித்து காட்டுகிறது ‘ஜல்லிக்கட்டு’. மனிதர்கள் கூட்டாக சேரும்போது அவர்களுக்குள் இருக்கும் பழைய காட்டுமிராண்டி குணம் சில நேரங்களில் வெளிப்பட்டு விடுகிறது. சாதி, மத, இனக் கலவரங்களின்போது இதனை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கலாம்.

மாட்டுக்கறியை வைத்து மிகப்பெரிய அரசியல் நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் மாட்டுக்கறியை வைத்தே இப்படியான ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மாட்டுக்கறி என்பது மிகவும் இயல்பான ஒன்று. பல மலையாள திரைப்படங்களில் அதனை பார்க்க முடியும். ‘பொரிஞ்சு மரியம் ஜோஸ்’ என்ற மலையாள படத்திலும் நாயகன் ஒரு மாட்டுக்கறி கடைதான் வைத்திருப்பான். கிறிஸ்தவர்களின் ‘திருநாள்’ பண்டிகையையொட்டி அந்த மிகப்பெரிய எருமையை வெட்டுவதற்காக கொண்டு வருவான். அந்தக் காட்சியையே மிகவும் கெத்தாக காட்டியிருப்பார்கள். அதாவது மாட்டுக்கறி என்பது அவர்களின் வாழ்வில் மிகவும் இயல்பான ஒன்று.

image

ஆஸ்கர் போட்டியில் இந்தியப் படங்கள்:

‘ஜல்லிக்கட்டு’ படம் தற்போது இந்தியா சார்பாக ஆஸ்கர் போட்டிக்கு அனுப்ப தேர்வாகியுள்ளது. இந்திய சினிமாவை பொருத்தவரை 1957-ல் எடுக்கப்பட்ட ‘மதர் இந்தியா’ தொடங்கி இதுவரை 63 படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழைப் பொருத்தவரை ‘தெய்வ மகன்’, ‘நாயகன்’, ‘அஞ்சலி’, ‘தேவர் மகன்’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன், ‘ஹேராம், ‘விசாரணை’ உள்ளிட்ட படங்களும் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எந்தப் படமும் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வெல்லவில்லை. ஏனெனில், இந்தப் பிரிவுக்கான போட்டி என்பது மகத்தானது மராத்தான். ஆம், ஹாலிவுட்டை தவிர்த்த உலகின் அத்தனை நாடுகளிலிருந்தும் சிறந்த படங்கள் இந்தப் போட்டிக் களத்தில் அணிவகுக்கும்.

இந்த மாபெரும் ஆஸ்கர் போட்டியில் இப்போது ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. ஆஸ்கர் விருது கிடைக்காவிட்டாலும்கூட உலக சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் இது சிறப்பான கறி விருந்து படைக்கும். உலக அளவில் சினிமா ஆர்வலர்களின் பலரது கவனத்திற்குச் செல்லும் என்பதே வெற்றிதான்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.