அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயல் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ,
“நிவர் புயலின் தன்மையை கண்டறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்ட காரணத்தினால் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி இருந்தாலும், அரசு அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பருவமழையின் போது கடலில் புயல் உருவாகி அதிகமான மழை மற்றும் காற்று வீசுவது வழக்கம். தற்பொழுது நிவர் புயல் வருவதற்கு முன்பே அதன் தன்மை குறித்து கண்டறிந்து வருவாய்துறை பேரிடர் மேலாண்மை மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமின்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது. அதிகமான மழை பெய்த காரணத்தினால் சென்னையில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சேதம் இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரிடர் மேலாண்மை இயக்குநரகத்திற்கு நேரில் சென்று கண்காணித்தது மட்டுமின்றி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேரில் சென்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். இதனால், அதிகாரிகள் கடந்த காலங்களில் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளை போன்று தற்பொழுது ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் விரைந்து செயல்பட்டதால், சேதங்கள் இல்லை என்ற நிலையை அரசு உருவாக்கியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க படைப்புழுவினால் மக்காச்சோளம் பாதிக்கப்பட்டபோது, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்சென்று, ஒரு ஹெக்டார் மானவாரி நிலத்திற்கு ரூ.5 ஆயிரம் ரூபாயும், தோட்டத்தில் பயிரிட்டவர்களுக்கு ரூ15 ஆயிரம் ரூபாயும் நிவராணம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு படைப்புழுவினை தாக்குதலை கட்டுப்படுத்த ரூ 50 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்து பூச்சி மருந்து தெளித்த காரணத்தினால் படைப்புழுதாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டு, மக்காச்சோளம் நல்ல விளைச்சல் கிடைத்தது.
இந்தாண்டு மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்த தேவையான வழிமுறைகளை கண்டறிந்து விவசாயிகளுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும், பாதிப்புகள் இருந்தால் கண்டறிந்து தேவையான உதவிகளை அரசு செய்யும்” எனத் தெரிவித்தார்.