பீகார் தேர்தலில் அழுத்தத்திற்கு உள்ளாகி தேர்தல் முடிவுகள் மாற்றப்பட்டதாக சில கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் வாக்குகளை எண்ணுவதில் கால தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதனிடையே ஆர்.ஜே.டி கட்சியானது, தாங்கள் 119 இடங்களை பிடித்த நிலையில் அதற்கான வெற்றி சான்றிதழ்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கொடுக்காமல் இழுபறி செய்துவருவதாகவும், அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் குற்றசாட்டு வைத்தனர். இது குறித்து பாட்னாவில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் மூலமாக புகார் அளித்தனர். இடது சாரிகளை பொருத்தவரையில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம் “ யாருடைய அழுத்தமும் இல்லை. மகா கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 119 வேட்பாளர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை. தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த உச்சநீதிமன்றமே பல அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.” என்று கூறியது.