விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பிரசவத்தின் போது பெண் உயிரிழந்ததற்குமருத்துவர் மற்றும் செவிலியர்கள் தான் காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தூர் அமீர்பாளையத்தைச் சேர்ந்த துப்புரவு பணியாளர் முருகேசன் என்பவரின் மனைவி பாண்டீஸ்வரி (21). இவரை தலைப் பிரசவத்திற்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கடந்த 31ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின் பாண்டீஸ்வரிக்கு அதிகமாக ஏற்பட்ட ரத்தப்போக்கால் உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். அத்துடன் அந்த குழந்தையும் இறந்துவிட்டது.
இதையடுத்து பிரசவத்தின் போது உயிரிழந்த பாண்டீஸ்வரி மற்றும் அவரது குழந்தையின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு மருத்துவமனையில் சரியாக பிரசவம் பார்க்கத் தவறிய மருத்துவரையும் செவிலியர்களையும் கைது செய்யக் கோரியும் அவரது உறவினர்கள் மற்றும் ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து கோஷம் எழுப்பினர்.