ஆளுமைமிக்க இரு அணிகளின் மோதல்! ஆக்ரோஷமாய் மோதிக் கொண்டு தெறிக்க விடப்போகிறார்கள், சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்கப் போகின்றன, நல்ல என்டர்டெய்ன்மென்ட் இருக்கிறது, பெரிய சம்பவங்கள் எல்லாம் அரங்கேறப் போகின்றன எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

2020 ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் முதல் இடம், கயிறு இழுக்கும் போட்டியில் நடப்பதைப் போல, மும்பை மற்றும் டெல்லியின் பக்கம் மாறிமாறிப் போய்க் கொண்டிருந்தது. ஆனால் தொடரின் இரண்டாம் பாதியில் டெல்லி சொதப்பலோ சொதப்பல் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது.

தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோற்று தங்களுடைய ஓட்டைகளையும் உடைசல்களையும் அடையாளம் காட்டியுள்ளனர். மும்பையோ நடப்பு சாம்பியன்ஸ் என்பதை நொடிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

#DCvMI

டாஸை வென்ற மும்பை போட்டியை விரைவில் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடோ என்னவோ பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தது‌. அதற்கேற்றாற்போல, டாமினோஸ் என்னும் விளையாட்டில், ஒரு கார்டைத் தட்டும் போது வரிசையாக அத்தனையும் கீழே விழுவதைப் போல அமைந்திருந்தது டெல்லியின் இன்றைய பேட்டிங் லைன் அப்பும்!

டெல்லியின் ஓப்பனிங் பஞ்சராகி இருப்பது தெரிந்த விஷயம் எனினும், சில போட்டிகளுக்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டிருக்கும், பிரித்வி ஷாவும், இரண்டு சதங்களை அடித்து விளாசிய தவானும் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்க, ரன் எதுவுமே எடுக்காமல் தவான் மூன்றாவது பந்திலேயே வெளியேற, அண்ணன் எவ்வழியோ நானும் அவ்வழியே என்பதைப் போல, பிரித்வி ஷாவும் தவானைப் போல போல்ட் பந்திலேயே வெளியேறினார். அடுத்தடுத்து வந்த ஷ்ரேயாஸ், பன்ட், ஸ்டோய்னிஸ் என யாருமே பொறுப்புணர்ந்து ஒழுங்காக விளையாடவில்லை. 12-வது ஓவரில், 21 ரன்களுடன் பன்ட் வெளியேறும் போது, அணியின் ஸ்கோர் மொத்தமே 62 ரன்கள் தான். 80 ரன்களையாவது தொடுவார்களா என்னும் வகையில்தான் டெல்லி பேட்டிங் செய்யும் விதம் இருந்தது. ஷ்ரேயாஸ் எடுத்த 25 ரன்களே, இன்று டெல்லி பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. ஏற்கெனவே அங்கொன்றும் இங்கொன்றுமாய் விரிசல்கள் தென்பட்ட டெல்லிக் கோட்டை, மும்பை இடி இறங்கி மொத்தமாய் சரிந்து விழுந்து விட்டததென்பதே உண்மை!

#DCvMI

தவானின் விக்கெட் விழுந்தபோது உருவான மொமன்டத்தை மும்பை அப்படியே தக்க வைத்துக் கொண்டது. போல்ட்டின் மூன்று விக்கெட்டுகளும், மத்திய ஓவர்களில் பூம்ரா எடுத்த மூன்று விக்கெட்டுகளும் போட்டியை மொத்தமாய் மும்பையின் பெயரில் மாற்றி எழுதி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி, இறுதியில் 111 என்ற மிகக் குறைவான ரன்களை மட்டுமே மும்பைக்கு இலக்காக நிர்ணயிக்க, சூர்யக்குமாருக்கே இது பத்தாதே என்றுதான் தோன்றியது. என்னதான் டெல்லி திறமையான பெளலர்களைக் கொண்டிருந்தாலும், மும்பையின் பேட்டிங் பலத்தை வைத்துப் பார்க்கையில் போட்டி 10-வது ஓவரில் முடியுமா, 12-வது ஓவரில் முடியுமா என்பது மட்டுமே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

அடுத்ததாய் விளையாடிய மும்பைக்கு, ஓப்பனர்களாக டி காக் மற்றும் இஷான் கிஷன் இறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தக் கூட்டணி, பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் ரன்களைக் கூட்டியது. நார்க்கியா, ரபாடா, அஷ்வின் என பந்துவீச்சால் கட்டம்கட்டிக் கலக்கிய டெல்லியால் எந்த விதமான அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டிவிட முடியவில்லை. அற்புதமான 11 ஓவரில், 26 ரன்களை எடுத்திருந்த டிகாக், நார்க்கியாவின் பந்தில் வெளியேற, அடுத்து உள்ளே வந்தார் சூர்யக்குமார் யாதவ். மற்ற மும்பை பேட்ஸ்மேனுக்கு எல்லாம் இன்று விடுமுறை அறிவித்து விட்டதைப்போல, ஒற்றை மனிதராய், ஒட்டு மொத்த டெல்லி பெளலர்கள் கண்களிலும் விரலை விட்டு ஆட்டிய இஷான் கிஷன், 47 பந்துகளில் 72 ரன்களைக் குவித்து, 15-வது ஓவரின் இரண்டாவது பந்தில், ஃபைனல் பன்ச்சாக, சிக்ஸர் அடித்து வெற்றியை தங்கள் அணிக்கு உரியதாக்கினார்.

#DCvMI

மும்பை சுனாமி சுழற்றியடித்ததில் சுருண்ட டெல்லி பேட்ஸ்மேன்கள், கொஞ்சம்கூட போராட்டத்தை வெளிப்படுத்தவில்லை‌‌. மொத்தமாய் அவர்களிடம் பணிந்து போய் விட்டனர் என்றே சொல்ல வேண்டும். தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி, சீசனின் முதல் பாதியில் கலக்கிய அணியா இது என்று உதட்டைப் பிதுக்க வைத்துள்ளனர்.

முதல் இடத்தில் மகுடம் சூடிக் கொண்டிருந்தவர்கள், ப்ளே ஆஃபிற்கு முன்னேறுவார்களா என்ற அளவிற்கு இறங்கி விட்டனர். மும்பையோ ஒவ்வொரு போட்டியிலும் மெருகேறி கோப்பையை நோக்கி ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்துக்கொண்டே இருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.