தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1035 வது சதய விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
தஞ்சை பெரிய கோவிலை கட்டி தமிழர்களின் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழன். அவரின் பிறந்த தினமும் அரியணை ஏறிய தினமான ஐப்பசி மாதம் சதய நாள் அன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக அரசு சார்பில் இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக அரசு விதிமுறைப்படி இந்த ஆண்டு ஒருநாள் மட்டுமே முக்கிய நிகழ்வுகளுடன் நடைபெறுகிறது.
இந்த சதய விழா நிகழ்ச்சிக்கு வரக்கூடிய பக்தர்களில் பத்து வயதிற்கு கீழ் உள்ளவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிவதோடு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சதய விழாவின் முக்கிய நிகழ்வான திருமஞ்சன வீதி உலா மற்றும் அரசு சார்பில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பெருவுடையாருக்கு 42 திவ்ய அபிஷேகங்களும், சுவாமி வீதிஉலா பெரிய கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற உள்ளது.
இன்று ராஜராஜசோழன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருப்பதால் தஞ்சை பெரிய கோவில் மற்றும் சிலை இருக்கக்கூடிய பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு தேவாரம் திருவாசகம் பாடி நிகழ்வுகள் தொடங்கப்பட்டது.