விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மூளையை ஒட்டிக் குத்திய மரக்குச்சிகளை அறுவைசிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் குமார்(42 வயது). சிறு விவசாயியான இவர் கடந்த 7ஆம் தேதி அன்று இரவு 7 மணிக்கு தனது நிலத்தில் வேலை செய்துவிட்டு பைக்கில் வந்தபோது திடீரென நாய் குறுக்கே ஓடியதால் பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புதரில் விழுந்திருக்கிறார். அங்கிருந்த மரக் கொம்புகள் இடது பக்க தலையில் குத்தி மண்டை ஓட்டை துளைத்து மூளையில் சொருகியிருக்கிறது. உயிருக்கு ஆபத்தான இந்த நிலையில் இரவு 10 மணிக்கு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர்.
மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் எடுத்து பார்த்தபோது இடதுபக்க மூளையில் 4 செ.மீட்டர் தடிமனும், 7 செ.மீட்டர் நீளமுள்ள மரக்குச்சி , 5 செ.மீட்டர் ஆழத்திற்குள் இருப்பதை கண்டறிந்தனர். மருத்துவ கல்லுாரி முதல்வர் குந்தவி தேவி மேற்பார்வையில் மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் குழுவினர் குமாருக்கு இரண்டு கட்டமாக மூளையில் குத்தியிருந்த மரக்குச்சியை ரிங் கிரேனியக்டமி முறையில் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
தொடர் சிகிச்சை மற்றும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய குமார் குணமடைந்து வருகிறார். மருத்துவர்களுக்கு கல்லுாரி முதல்வர் குந்தவி தேவி பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.