வெளிநாட்டில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ரூ.600 கோடி கடன் வாங்கி தருவதாகக்கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் தந்தை மகன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்தவர் ஜீவா (58). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அதேபோல கொடைக்காலைச் சேர்ந்த சஞ்சீவி (63), இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரும் இவரது மகன் இமானுவேலும் மாலத்தீவில் ரூ.200 கோடி மதிப்பிலான கட்டுமானப்பணி வாய்ப்பை பெற்றுத் தருவதாக ஜீவாவிடம் தெரிவித்துள்ளனர்.
அந்த வாய்ப்பினை பெற வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.600 கோடி கடன் வாங்கி தருவதாகவும் ஜீவாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். கடனை வாங்கி தருவதற்கு ரூ.40 லட்சம் முன் பணம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். ரூ.600 கோடி கடன் கிடைக்கும் என்ற நம்பிகையில் ஜீவா கடந்த வருடம் ரூ.40 லட்சத்தை கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட சஞ்சீவி மற்றும் இமானுவேல், ஆகியோர் கடன் தொகை ரூ.600 கோடியை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் முன்பணமாக கொடுத்த ரூ.40 லட்சத்தை திருப்பிக் கேட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஜீவா, இந்த மோசடி குறித்து கடந்த வருடம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்ய துவங்கியவுடன் தந்தையும், மகனும் தலைமறைவாகி விட்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் தந்தையும் மகனும் கோயமுத்தூரில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட சஞ்சீவி மற்றும் இமானுவேல் ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வருகின்ற 6ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.