ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் முதல்முறையாக வெளியேறியுள்ளது சென்னை அணி.
ஷார்ஜாவில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீஸனின் 41-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு மாற்றாக பொல்லார்ட் மும்பை அணியை வழிநடத்தினார்.
வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற அழுத்தத்தோடு சென்னை விளையாடியது. இளம் வீரர்களுக்கு சென்னை அணியில் வாய்ப்பு கொடுக்க மறுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஆடும் லெவனில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெகதீசன் அணியில் இடம் பெற்றனர்.
சென்னை அணிக்காக கெய்க்வாடும், டூப்ளஸியும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். கெய்க்வாட், ராயுடு, ஜெகதீசன், டுப்ளஸி, ஜடேஜா, தோனி என சென்னையின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கிரீஸுக்கு வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
மும்பையின் போல்ட் மற்றும் பும்ரா பவர்பிளேயில் சி.எஸ்.கேவின் டாப் ஆர்டரை COLLAPSE செய்தனர். தோனியின் லெக் ஸ்பின் அலர்ஜி இந்த ஆட்டத்திலும் தொடர்ந்து. ராகுல் சஹாரின் சுழலில் தோனி விக்கெட்டை இழந்தார். சென்னையின் கடைக்குட்டி சங்கம் சாம் கர்ரன் தனி ஆளாக மும்பையின் பவுலர்களோடு சண்டை செய்தார்.
47 பந்துகளில் 52 ரன்களை சாம் கர்ரன் குவித்து ஆறுதல் கொடுத்தார். அதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும்.
இறுதி வரை ஆடிய சாம் கர்ரன் கடைசி பந்தில் அவுட்டானார். இருபது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை குவித்தது சென்னை.
மிக சுலப இலக்கை விரட்டிய மும்பை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக டி காக்கும், இஷான் கிஷனும் களம் இறங்கினர். இருவருமே சென்னை பவுலர்களின் பந்து வீச்சை பவுண்டரிக்கு பறக்க விடுவதில் பிசியாக இருந்தனர்.
அதில் இஷான் கிஷனின் கை ஓங்கியிருந்தது. 37 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். அதில் ஆறு பவுண்டரிகளும், ஐந்து சிக்ஸர்களும் அடங்கும்.
மறுப்பக்கம் அவருக்கு கம்பெனி கொடுத்த டி காக் 37 பந்துகளில் 46 ரன்களை குவித்தார்.
12.2 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 116 ரன்களை குவித்து COMFORTABLE வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது மும்பை.
மறுபக்கம் முதல்முறையாக ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது சென்னை அணி. இதற்கு முந்தைய சீசன் வரை சென்னையின் ஆட்டம் வேற லெவலாக இருந்தது. இந்த ஆட்டத்தில் ஏனோ அது எடுபடாமல் போனது.
‘உள்ளுக்குள் கொஞ்சம் வலிக்கிறது. இந்த சீசன் எங்களுடையது இல்லை. அடுத்ததாக விளையாட உள்ள மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும்’ என தோனி தோல்விக்கு பிறகு தெரிவித்தார்.