திட்டக்குடி அடுத்த புலிவலம் கிராமத்தில் ஆர்த்தி என்ற இளம்பெண் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு கணவர் வீட்டு முன்பு தர்ணா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் முத்தையா என்பவருக்கும் இளம் மங்கலத்தைச் கிராமத்தை சேர்ந்த செல்வம் மகள் ஆர்த்தி 22 ,என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கு 37 சவரன் தங்க நகையும், ரொக்கம் 10 லட்சமும் தாய் வீட்டு சீதனமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்த்தி தங்க நகையையும் ரொக்கம் 10 லட்சத்தையும் தானே வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தன் மனைவி ஆர்த்தியிடம் தங்கநகை மற்றும் 10 லட்சம் பணத்தையும் கேட்டு முத்தையா தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. ஆர்த்தி தான் சட்டக்கல்வி படிப்பதற்கு பணம் தேவைப்படுவதால் அந்தப் பணத்தைத் கணவரிடம் தர மறுத்துள்ளார். இதனால் அடிக்கடி குடும்பத்திற்குள் சண்டை நடந்துள்ளது.
இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியான ஆர்த்தி தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார் அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகின்றது.இதுவரை கணவரோ கணவர் வீட்டாரோ யாரும் ஆர்த்தி மற்றும் குழந்தையையோ பார்க்க இதுநாள் வரைபார்க்கவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஆர்த்தி இன்று காலை புலி களத்தில் உள்ள தனது கணவர் முத்தையா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது மாமியாரிடம் தனது கணவரை தன்னுடன் வரும்படி சேர்த்து வைக்கும் படி கேட்டுள்ளார். அதற்கு அவரது மாமியார் ’உன் கணவன் வீட்டில் இல்லை. சென்னையிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் பழக் கடையில் வேலை பார்க்கிறான்’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஆர்த்தி தனது கணவர் வீட்டுக்கு முன்பு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தையும் இடது கையை அறுத்துக்கொண்டு வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். திடீரென அவர் கத்தியால் அறுத்துக் கொண்டது அருகில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீசார் ஆர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு இருந்து அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.