முத்தையா முரளிதரன் குறித்த 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதா? இல்லையா என்பது குறித்து ஓரிரு நாளில் விஜய் சேதுபதி முடிவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் சுழற்பந்து குறித்து பேசினால், அதில் தவிர்க்க முடியாத தவறாமல் இடம்பெறும் பெயர் ’முத்தையா முரளிதரன்’. தனது சுழற்பந்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியவர்.
அவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், அதற்கு அரசியல் கட்சியினரும் சமூக செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பாரதிராஜா, விவேக்,சேரன், உள்ளிட்ட முன்னனி சினிமா பிரபலங்களும் விஜய் சேதுபதிக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இதனிடையே 800 திரைப்படம் முற்றிலும் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை விளையாட்டு சம்மந்தப்பட்டப் படமே தவிர எந்தவித அரசியலும் கிடையாது என அதன் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், 800 திரைப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகுவதா? இல்லையா என்பது குறித்து ஓரிரு நாளில் விஜய் சேதுபதி முடிவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.