அதிமுக பெண் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த அமுமுக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்லின் பிரேம லதா என்ற லதா சந்திரன். முன்னாள் அளூர் பேரூராட்சி தலைவியான இவர், தற்போது ஆளூர் பேரூர் அ.இ.அ.தி.மு.க கழக செயலாளர், வீரநாராயண சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் என பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டு முகவரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு தபால் ஒன்று வந்துள்ளது. அது மணிகட்டிபொட்டல் பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் அனுப்பியதாக அந்த தபாலில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை பிரித்து படித்த லதா சந்திரன் அதிர்ச்சியடைந்தார்.
அந்த கடிதத்தில் அவரை பற்றி அவதூறாக எழுதி இருந்ததுடன், அவரை குடும்பத்துடன் லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் “அரசியலை விட்டு ஓடி விடு, இல்லையெனில் உன்னை கட்சியில் இருந்து கெட்ட பெயருடன் வெளியேற வைப்பேன் என்றும் நீ எங்கு செல்கிறாய் என்று நோட்டமிட ஆள் வைத்துள்ளதாகவும் உன்னை வாழ விடமாட்டேன்” என்றும் எழுதப்பட்டிருந்தது.
இதனையடுத்து லதா சந்திரன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மணிக்கட்டி பொட்டல் பகுதிக்கு சென்று ராகவன் வீட்டில் விசாரணைக்கு சென்றபோது அவர் தலைமறைவானார்.
தொடர் விசாரணையில் அ.ம.மு.க நிர்வாகியாக இருக்கும் ராகவன் தான் அந்த கடிதத்தை அனுப்பியது தெரிய வந்தது. அவர் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 294(b)., 506/2 கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த இரணியல் போலீசார் தலைமறைவான ராகவனை தேடி வருகின்றனர்.