ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள அரிய விலங்கான டாஸ்மேனியன் டெவில், 3,000 ஆண்டுகளில் முதல்முறையாக வனப்பகுதிக்கு திரும்பியுள்ளது.
பாலூட்டிகளில் வயிற்றில் பை உள்ள மாமிச உண்ணி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு, டாஸ்மேனியன் டெவில். ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் மட்டும் காணப்பட்டதால், இதற்கு டாஸ்மேனியன் டெவில் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த விலங்கு ஆஸ்திரேலியாவில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் இருந்துள்ளது. ஆனால், படிப்படியாக இதன் எண்ணிக்கை குறைந்து, ஒன்றரை லட்சம் அளவுக்கு வந்துவிட்டது. மேலும், 1990-ம் ஆண்டுகளில் அரிய வகை முகப் புற்றுநோய் இந்த விலங்குகளை தாக்கியதில், அழிவின் விளிம்பு நிலைக்கு சென்றன.
இந்நிலையில், டாஸ்மேனியன் டெவில் விலங்கை பாதுகாக்கவும், அதிகரிக்கவும், ‘ஆஸி ஆர்க்’ என்ற அமைப்பு திட்டத்தை கையில் எடுத்தது. அதன்படி, இந்த அமைப்பு மற்ற வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து டாஸ்மேனியன் டெவில் விலங்குகளை இனப்பெருக்கம் செய்து வந்தது.
அதன் ஒரு கட்டமாக 26 டாஸ்மேனியன் டெவில் விலங்குகள் ஆஸ்திரேலிய தேசிய பூங்காவில் அவிழ்த்துவிடப்பட்டன. ஆஸ்திரேலியாவின் பேரிங்டன் டாப் பகுதியில் 400 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சரணாலயத்தில் இந்த விலங்குகள் விடப்பட்டுள்ளன.
டாஸ்மேனியன் டெவில் விலங்கின் எடை 8 கிலோ வரை இருக்கும் என்றும் இது மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல என்றும் தற்போது 25 ஆயிரம் டெவில் விலங்குகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.