கொரோனாத் தொற்று வேகமாக பரவி நிலையில், அலுவலகச் சூழலில் பணிபுரிவது எப்படி கொரோனாத் தொற்றை பரவச் செய்கிறது என்பது குறித்த ஒரு ஆராய்ச்சியை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பெரும்பான்மையான அலுவலகச் சூழல் ஏசி அறைகளாக உள்ளன. வெளிப்புற காற்று உள்ளே வந்து செல்ல ஏதுவாக வழி இருப்பதில்லை. அறையின் அனைத்துப் பகுதிகளிலும் சமமான வெப்பநிலை நிலவ வேண்டும் என்பதற்காக இந்த அமைப்பு அமைக்கப்படுகிறது. ஆனால் இந்த அமைப்பு கொரோனா தொற்றை எளிதாக பரவச் செய்யும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வெளிப்புற காற்று எளிதாக வந்து செல்ல முடியாத நிலை இருப்பதால் அறைக்குள்ளேயே தொற்றுக்குகாரணமான திரவத்துளிகள் சுற்றிக்கொண்டிருக்க வாய்ப்புண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசமின்றி இருமுதல், தும்முதல் போன்ற செயல்களை செய்யும் போது அந்த தொற்றுக்கான திரவத்துளிகள் காற்றில் கலந்து அறைக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கும் என்றும், முகக் கவசம் அணியாதவர்களை அது எளிதில் தொற்றிவிடும் எனவும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட நபர் முகக்கவசம் இன்றி பேசுதல், சிரித்தல் கூட அது மற்றவர்களை எளிதில் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியாக காற்றோட்ட வசதி இல்லாத அலுவலகம் என்றால் வீட்டில் இருந்தே வேலை செய்வது நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.