கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. தெப்பக்குளம், கோரிப்பாளையம், காளவாசல், கே.புதூர், ஆரப்பாளையம், சிம்மக்கல், பழங்காநத்தம் ஆகிய இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகள் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்த மழையால் மக்கள் மகிழ்வுற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. வந்தவாசி, பாதிரி, மும்முனி, சென்னாவரம், அத்திப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெய்த மழையால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதே போன்று, மயிலாடுதுறை, திருக்கோவிலூர், கடலூர் ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில், 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கடலூர், நீலகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.