’கும்கி’ படத்திற்கு பிறகு மீண்டும் விக்ரம் பிரபு – லட்சுமி மேனன் ஜோடி இயக்குநர் முத்தையா இயக்கவிருக்கும் புதிய படத்தில் இணையவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
’நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தமிழில் முதன் முறையாக பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி படத்தில்தான் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் பழங்குடியினப் பெண் கெட்டப்பில் நடிப்பில் ஈர்த்திருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், மீண்டும் இந்த வெற்றி ஜோடி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் முத்தையா இயக்கத்தில் இணையவுள்ளார்கள். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்த சில படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தன. இதனால், லட்சுமி மேனன் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். தற்போது கும்கி வெற்றிக் கொடுத்த நம்பிக்கையில் மீண்டும், இந்த ஜோடி இணைந்துள்ளது.
ஏற்கனவே, 2013 ஆம ஆண்டு வெளியான முத்தையாவின் முதல் படமான குட்டிப்புலி படத்தில் சசிகுமாருக்கு லட்சுமி மேனன் தான் ஹீரோயினாக நடித்தார். அடுத்ததாக 2015 ஆம் ஆண்டு வெளியான கொம்பன் படத்தில் கார்த்தி ஜோடியாக முத்தையா இயக்கத்திலேயே நடித்திருந்தார். தற்போது, முத்தையா மூன்றாவதாக இயக்கவிருக்கும் இப்படத்திற்கு ‘பேச்சி’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முத்தையா – லட்சுமி மேனன் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும். மேலும், கும்கி படத்தில் விக்ரம் பிரபுவும் லட்சுமி மேனனும் காதலர்களாக இருந்து க்ளைமேக்ஸில் பிரிந்து விடுவார்கள்.
பேச்சி படத்திலாது சேருவார்களா? என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.