விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மூன்று வருடங்களாக வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள்.தனியார் பள்ளி வேலையை விட்டுவிட்டு கூலி வேலை செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 8 ஆண்டுகளாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட துறைகளுக்கு ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படாத நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு காலியாக உள்ள 532 உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட 663 காலியிடங்களுக்கான தேர்வு நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்வு எழுதி வெற்றி பெற்றும் பணியமர்த்தப் படாததால் 663 ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர். அதிக அளவு பாதித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்ற போதே ஏற்கெனவே வேலை பார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து இந்த 663 பேரும் வெளியேற்றப்பட்டனர்.
ஏற்கெனவே பார்த்த வேலையும் இல்லாததால் பல்வேறு ஆசிரியர்கள் தனியார் பார் மற்றும் மில்களில் வேலை பார்த்து வந்தனர். கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களாக எவ்வித வேலையும் இல்லாமல் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு இந்த 663 குடும்பங்களும் தள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி மாதம் 2020ஆம் ஆண்டு காலியாக உள்ள பணியிடங்களை ஆறு வாரங்களுக்குள் நிரப்பவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்தாமல் தமிழக அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களை பணி அமர்த்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
தற்போது வரையில் தமிழகம் முழுவதும் 1500 -க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து 663 ஆசிரியருக்கு பணி வழங்க வேண்டுமென தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.