கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சிக்ஸர் லைனுக்குள் முழுவதும் சென்று, சிக்ஸரை தடுத்து வரலாற்று ஃபீல்டிங்கை இன்றைய ஐபிஎல் போட்டியில் நிக்கோலஸ் பூரான் படைத்திருக்கிறார்.

ஷார்ஜாவில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 223 ரன்களை சேஸ் செய்து ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். மொத்தமாக 449 ரன்கள் குவிக்கப்பட்ட இந்த ஆட்டத்தின் டாப் 10 தருணங்களை காணலாம்.

image

1. டாஸ் : வெற்றி கணக்கு போட்ட ஸ்மித்

பவுலிங் லைன்அப் மீது பலமான நம்பிக்கை கொண்ட ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்றதும் பவுலிங்கை தேர்வு செய்தார். கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன், மேக்ஸ்வெல் மாதிரியான பேட்ஸ்மேன்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த நினைத்து ஸ்மித் பவுலிங்கை தேர்வு செய்திருக்கலாம். ஆனால் அது ஆட்டத்தின் முற்பாதியில் தப்பு கணக்காக மாறிவிட்டது. இருப்பினும் அமீரகத்தின் மைதானங்களில் இரண்டாவதாக பேட் செய்கின்ற அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என சொல்லப்பட்டது. அது இந்த ஆட்டத்தின் மூலம் பலமாக நிரூபணமாகியுள்ளது.

image

2. அதிரடி தொடக்கம்

டாஸை இழந்து பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. குட் லெந்த், பேட் லெந்த் என எந்தவித கரிசனமும் இல்லாமல் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாய் பறக்கவிட்டனர் பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர்கள். கே.எல் ராகுலும், மயங்க் அகர்வாலும் 183 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் செய்திருந்தனர்.

image

3. சதம் விளாசிய மயங்க் அகர்வால்

பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் தான் இந்த சீஸனின் சிறந்த ஓப்பனிங் என சொல்லலாம். முதல் போட்டியில் மயங்க் அகர்வால் டெல்லிக்கு எதிராக சூப்பராக விளையாடி இருந்தார். கேப்டன் கே.எல் ராகுல் பெங்களூருவுக்கு எதிராக மாஸ் காட்டியிருந்தார். ஆனால் இருவருமே இந்த போட்டியில் இணைந்து ஆடியிருந்தனர். மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களை குவித்திருந்தார். அதில் பத்து பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 212 ஆகும்.

image

4. கேப்டன்சி நாக் ஆடிய ராகுல்

எதிர் திசையில் மயங்க் அகர்வால் ராஜஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்து கொண்டிருக்க அகர்வாலுக்கு சூப்பராக கம்பெனி கொடுத்து ஆடினார். அவர் பஞ்சாப் அணியின் கேப்டன் என்பதால் பொறுப்போடு விளையாடி ராஜஸ்தான் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்திருந்தார். பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடி சரவெடியாய் வெடித்தவர் இந்த ஆட்டத்தில் அடக்கி வாசித்தார். 54 பந்துகளில் 69 ரன்களை குவித்திருந்தார் ராகுல்.

image

5.சொதப்பிய ராஜஸ்தான் பவுலர்கள்

ஷார்ஜா மைதானம் குட்டி ஸ்டேடியமாக இருந்தாலும் துல்லியமாக பந்து வீசினால் கெத்து காட்டலாம் என்பதை நிரூபித்து காட்டியதே ராஜஸ்தான் அணி தான். சென்னை உடனான ஆட்டத்தில் ராஜஸ்தான் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசியிருந்தனர். ஆனால் அதே ராஜஸ்தான் பவுலர்கள் இந்த ஆட்டத்தில் மொத்தமாக சொதப்பியிருந்தனர். முதல் 16 ஓவர்கள் வரை விக்கெட் வீழ்த்தாமல் ஏமாற்றியிருந்தனர் ராஜஸ்தான் பவுலர்கள். ஆர்ச்சர் தொடங்கி அனைவருமே பலமாக உதை வாங்கியிருந்தனர்.

image

6. பட்லர் VS காட்ரல்

பஞ்சாப் அணிக்கு எதிராக அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடுவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மேன் பட்லருக்கு பேட் வந்த கலை. கடந்த சீசனில் அவரை அவுட் செய்ய மன்கட் ஆயுதத்தை அப்போதைய பஞ்சாப் கேப்டன் அஷ்வின் எடுத்திருந்தார். இன்றைய ஆட்டத்திலும் பட்லர் அபாரமான இன்னிங்ஸை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 7 பந்துகளில் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்த பட்லர் காட்ரல் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

image

7. பீல்டிங்கில் மாஸ் காட்டிய பஞ்சாப்

பஞ்சாப் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இயங்கி வருகிறார் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ். அவரது கோச்சிங் போட்டியில் பிரகாசமாக எதிரொலித்தது. நிக்கோலஸ் பூரன், மயங் அகர்வால், சர்பராஸ் கான் நன்றாக பந்துகளை தடுத்தனர். ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் முருகன் அஷ்வின் வீசிய பந்தை சஞ்சு சாம்சன் டீப் மிட் விக்கெட் திசையில் பறக்கவிட, சிக்ஸருக்கு போன அந்த பந்தை ஒற்றை கையால் தடுத்து மைதானத்திற்குள் தூக்கி போட்டார் நிக்கோலஸ் பூரன். இந்த ஃபீல்டிங்கை டி20 கிரிக்கெட்டின் மாஸ்டர் பீஸ் ஒன்று என சொல்லலாம்.

image

8. ஆறுதல் கொடுத்த ஸ்மித்

பெரிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ஆறுதலாக அமைந்தது கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டம். அன் ஆர்த்தாடாக்ஸ் பேட்ஸ்மேனான ஸ்மித் பஞ்சாப் பந்து வீச்சை ஒரு காட்டு காட்டியிருந்தார். ஷமி , காட்ரல், நீஷம் மாதிரியான பவுலர்களின் பந்து வீச்சை அசால்டாக அப்செட் செய்து பவுண்டரிக்கு பறக்க விட்டிருந்தார். 27 பந்துகளில் 50 ரன்களை எடுத்த பின்னர் அவர் அவுட்டானார். இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்ஸர்களும் அடக்கம்.

image

9. வெற்றிக்காக களத்தில் போராடிய சஞ்சு சாம்சன்

4 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 42 பந்துகளில் 85 ரன்களை குவித்திருந்தார் சஞ்சு சாம்சன். அவரது அதிரடியால் இலக்கை எட்டும் சாத்தியம் ராஜஸ்தான் அணிக்கு தென்பட்டது.

image

10. அம்பியாக இருந்த ராகுல் திவாட்டியா அந்நியனாக மாறினார்

சஞ்சு சாம்சன் அவுட்டானதும் ராஜஸ்தான் அணி தோற்று விட்டது என எண்ணிய வேளையில் ‘அப்படியெல்லம் நினைக்க வேண்டாம் நான் இருக்கேன்’ என மெர்சல் காட்டினார் ராகுல் திவாட்டியா. சஞ்சு கிரீஸில் இருக்கும் வரை ஆமை வேகத்தில் ஆடிக் கொண்டிருக்க அவர் அவுட்டானதும் மொத்த பொறுப்பையும் தன் தோள்களில் சுமந்து கொண்டு 31 பந்துகளில் 53 ரன்களை குவித்திருந்தார். அதில் 7 சிக்ஸர்களும் அடங்கும். காட்றல் வீசிய 18வது ஓவரில் ஐந்து சிக்ஸர்களை அடித்து அம்பியாக இருந்த திவாட்டியா அந்நியனாக அவதாரம் எடுத்து ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற பெருமையை ராஜஸ்தானுக்கு பெற்றுக்கொடுத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.