சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதில், துணை முதல்வர் ஒபிஎஸ் பேசுகையில், “தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன். என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா; ஆனால் உங்களை(ஈபிஎஸ்) முதல்வர் ஆக்கியது சசிகலா” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஈபிஎஸ் “இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான். ஒரு முதலமைச்சராக நான் என்ன சிறப்பாக செயல்படவில்லையா? பிரதமரே எனது தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளார். கொரோனா காலத்திலும் நான் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை எழுந்துள்ளது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்த ஒபிஎஸ், “முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்ததற்கு நான் காரணமல்ல. நான் தான் காரணம் என்று யாராவது சொல்ல முடியுமா? என்னை தனிமைப்படுத்த எடுக்கும் முயற்சிதான் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவிக்க சொல்லும் இந்த முடிவு. உயிரிழப்பதற்கு 21 நாட்களுக்கு முன் என்னை முதல்வராக சொன்னவர் ஜெயலலிதா” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து இரண்டு பேரும் சேர்ந்து நல்ல முடிவெடுங்கள் என அமைச்சர் வேலுமணியும் இருவரும் விட்டுக் கொடுக்க வேண்டும் என மனோஜ் பாண்டியனும், எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்; ஓபிஎஸ் விட்டுக்கொடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கமணியும் செயற்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.