பாப்கார்ன் விற்கும் ஏழை சிறுவனின் ஆன்லைன் வகுப்புக்காக சோனுசூட் ஸ்மார்ட் போன் பரிசளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி பேருதவி செய்ததன் மூலம் புகழ் பெற்றார் நடிகர் சோனு சூட். அதிலிருந்து அவருக்கு சமூக வலைதளங்களில் பலர் கோரிக்கை வைத்து வந்தார்கள். ஆந்திராவில் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக்கொடுத்தது என்று அவர் உதவிகளின் பட்டியல் நீளும்.
பல மாநிலங்களில் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. வசதியான மாணவர்கள் வீடுகளில் ஸ்மார்ட் போன்கள் இருப்பதால் பிரச்சனை இல்லை. ஆனால், ஆன்லைன் வகுப்புகளால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சோனு சூட்டிடம் சாலைகளில் பாப்கார்ன் விற்கும் சிறுவனுக்கு ஆன்லைன் வகுப்புக்காக ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுக்கும்படி பெண் ஒருவர் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு சோனு சூட் உடனடியாக ‘ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுக்கிறேன். சிறுவனின் விவரங்களை அனுப்புங்கள். ஆனால், எனக்கு சிறுவன் பாப்கார்ன் கொடுக்கவேண்டும்’ என்று நகைச்சுவையோடு கூறியிருக்கிறார்.
இதையும் படிக்கலாமே… சிங்கம் இல்லாத குகை: வேதா இல்லத்தில் கடைசியாக ஜெயலலிதா வாழ்ந்தது இதே நாளில்தான்!