வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறி உள்ளது. மேலும், கடனைத் திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஒத்தி வைப்பதற்கான திருத்தம் கொண்டுவரப்பட்டது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை கொரோனா பெருந்தொற்றில் சிக்கி சின்னாபின்னமாயிருக்கின்றன. தொடர்ந்து போடப்பட்ட ஊரடங்கு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டு, வர்த்தகம் இழந்து நலிவடைந்து போயிருந்த நிலையில், மத்திய அரசின் ஒரு சில திட்டங்கள் தற்காலிகமாக அந்நிறுவனங்களைக் கரை சேர்த்திருக்கின்றன.
தொழில்கள் அனைத்தும் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என்கிற நிலை நிலவிவருவதால், அவர்கள் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இதைத் தற்போதைய வங்கி திவால் சட்டத்தின் கீழ், கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், தொழில் நிறுவனங்களின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இச்சட்டத்தில் திருத்தும் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அடுத்த 6 மாதங்கள் அல்லது அதற்கும் மேல் நீட்டிக்கப்படும் வரை இந்தக் காலகட்டத்தில் கடனைத் திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது தற்காலிகமாக இந்த மசோதா மூலம் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read: ATM விதிமுறைகளை மாற்றும் SBI வங்கி… ₹10,000-க்கும் மேல் பணம் எடுக்க புது வழிமுறை!
‘திவால் சட்ட திருத்த மசோதா’?
கடனைத் திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் ‘திவால் சட்டத் திருத்த மசோதா’ 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில், அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் வாராக்கடன் நிறுவனங்களின் சொத்துகள் ஏலம் விடப்படும்போது, அந்த நிறுவனங்கள் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாது. கடன் மோசடி செய்த நிறுவனங்கள் நிறுவன அமைப்புகளைப் பயன்படுத்தி, தங்களிடம் உள்ள நிதியை வேறு வகையில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இந்தச் சட்டம் மூலம் அபராதமாக ஒரு லட்சம் முதல் ரூ.2 கோடி வரை விதிக்கலாம்.