‘ஆன்மிக பெரியாரின் ஆட்சி மலரட்டும்’ என நடிகர் ரஜினி ரசிகர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் கடைசியாக செய்தியாளர்களிடம் பேசிய போது “தமிழக இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகே, நான் அரசியலுக்கு வருவேன். மேலும் அரசியல் மாற்றம் இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை” என தெரிவித்திருந்தார்.
அப்போதிலிருந்த நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் ரஜினியை அரசியலில் மைப்படுத்தும் விதமாக ‘நல்லவர் பின்னாலே நாடே வரும் தன்னாலே’, ‘எம்.ஜி.ஆர் போல இல்லையென்றாலும் எம்.ஜி.ஆரின் ஆட்சியை தருவேன்’ எனவும் ரஜினி ரசிகர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இதனையடுத்து ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்ட வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மதுரையில் ரஜினி ரசிகர்கள் ‘கடவுள் நிந்தனை ஒழியட்டும், ஆன்மீக ஆட்சி மலரட்டும்’, ‘ஆன்மீக பெரியாரின் ஆட்சி மலரட்டும்’, ‘அரசியல் மாற்றம் இப்ப இல்லைனா எப்பவும் இல்ல’ ஆகிய வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை போட்டியுள்ளனர்.