சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் கொரோனாவில் இருந்து மீண்டபோதிலும் அவருக்கும் இன்னும் இருமுறை பரிசோதனைகள் நடத்தப்பட இருக்கிறது. இதனால் அவர் அணியில் இணைவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை அன்று யுஏஇ-ல் உள்ள அபுதாபி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் நடைபெறயிருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக இந்த முறை முழுவதும் யுஏஇ-ல் (ஐக்கிய அரபு அமீரகத்தில்) நடைபெறவுள்ளது. அபுதாபி, ஷர்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று மைதானங்களில் மட்டும் தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளன.
இதனால் சிஎஸ்கே வீரர்கள் கடந்த மாதமே துபாய் சென்றனர். அங்கு அனைத்து அணி வீரர்களும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் கரோனாவிலிருந்து குணமடைந்து பயிற்சியில் இணைந்துவிட்டார்.
இப்போக 11 பேருக்கும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்ததையடுத்து, அவர்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மற்றொரு வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தாலும், அவருக்கு கூடுதலாக 2 பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. இதனால் சிஎஸ்கே விளையாடும் முதல் சில போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.