எதிர்காலத்தில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என எஸ்.வி.சேகர் உறுதியளித்துள்ளார்.
 
எம்.ஜி.ஆர். சிலைக்குக் காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.
 
அதற்குப் பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியைக் களங்கம் எனக் குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டிவிட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா? என்றும் பேசி வீடியோ வெளியிட்டார். மேலும், மூன்று வர்ணங்கள் குறித்த புதுவிளக்கம் ஒன்றையும் எஸ்.வி.சேகர் கூறினார்.
 
தேசியக் கொடியை அவமதித்தும், தமிழக முதல்வரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
 
இந்தப் புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவினர் பதிவு செய்த வழக்கில், தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் காவல்துறையின் விளக்கத்தைப் பொறுத்து முடிவு என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
 
image
 
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு சார்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என உத்தரவாதம் அளிப்பதோடு, நடந்தவற்றுக்கு நீதிமன்றத்தின் முன் அவர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்தார். ஆனால், இந்த வழக்கை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
 
இவற்றைப் பதிவு செய்த நீதிபதி, நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினால் கைது செய்ய மாட்டோம் என காவல்துறை தெரிவித்துள்ளது குறித்து, மனுதாரர் முடிவெடுத்து, அவரது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்க அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
 
இந்நிலையில், தேசியக் கொடியை அவமதித்து தொடர்பான முன் ஜாமீன் வழக்கில் வருத்தம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்துள்ளார். எதிர்காலத்தில் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் எனவும் எஸ்.வி.சேகர் உறுதியளித்துள்ளார். இதையடுத்து முன் ஜாமீன் வழக்கு விசாரணை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.