கொரோனா காரணமாக பள்ளிகளின் நீண்ட விடுமுறை காலத்தில் குழந்தைகளை சாப்பிட வைப்பதுதான் பெற்றோர்களின் மிகப்பெரிய வேலை. குழந்தைகளை எளிதாக சாப்பிட வைக்கவும், அவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்குவதற்கும் ஆலோசனை வழங்குகிறார் இயற்கை உணவு வல்லுனர் கோபாலகிருஷ்ணன்.
தித்திப்பு வடை :
உளுந்து 350 கிராம் எடுத்து, அதனுடன் 20 மொந்தன் வாழைப்பழங்களை உரித்து சேர்த்துக்கொள்ளவும். பிறகு இவையிரண்டையும் கல் உரலில் போட்டு அரைத்து வடைதட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் ஊட்டச்சத்து மிக்க உணவு இது
கொள்ளுபருப்பு பொங்கல்:
175 கிராம் அளவுக்கு கொள்ளு எடுத்துக்கொண்டு, அதனை சட்டியில் இட்டு வறுத்த பிறகு உரலில் அல்லது ஆட்டுக்கல்லில் குத்தி தோலை நீக்கி வைத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் 350 கிராம் அரிசியை சேர்த்து வேகவைக்கவேண்டும். அத்துடன் உப்பு, மிளகு மற்றும் நெய் ஆகியவற்றை தேவையான அளவு சேர்த்துக்கொண்டால் பொங்கல் தயார். உடல்பருமன் உள்ள குழந்தைகளுக்கு இந்த உணவை தொடர்ந்து கொடுத்துவர, அவர்கள் இயல்பான உடல் எடைக்கு திரும்புவார்கள்.
கேரட், பீட்ரூட் இட்லி:
கேரட் மற்றும் பீட்ரூட்டை சிறிது சிறிதாக துருவி எடுத்துக்கொண்டு அதனை இட்லிமாவுடன் கலந்து வேகவைத்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காய்கறிகள் மூலமான ஊட்டச் சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.
சிவப்பு அரிசி, அத்திப்பழ இட்லி:
மாப்பிள்ளை சம்பா எனப்படும் சிவப்பு அரிசி நரம்பு பிரச்னைகளை தீர்க்கக்கூடியது. அதனால் சாதாரண அரிசி இட்லிக்கு பதிலாக, சிவப்பு அரிசியை போட்டு மாவு அரைக்கும்போது அதில் அத்திப்பழம் மற்றும் பேரிச்சைப்பழத்தை கலந்து மாவு அரைத்து குழந்தைகளுக்கு இட்லி செய்து கொடுத்தால் அத்தனை உயிர்ச்சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.