சென்னை எம்.ஜி.ஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி. மூதாட்டியான அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென அங்கிருந்து மூதாட்டி கஸ்தூரி தப்பி ஓடியுள்ளார். தகவல் அறிந்த எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்துள்ளனர்.
‘அவரின் செல்போன் எண்ணை வைத்து அவர் எங்குள்ளார்?’ என போலீசார் தேடினர். விசாரணையில், ஆட்டோ மூலமாக நெய்வேலியில் இருக்கும் தனது மகளை பார்க்க மூதாட்டி கஸ்தூரி சென்னையில் இருந்து நெய்வேலிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் மூலமாக தனது மகளை தொடர்பு கொண்டு தான் அங்கு வருவதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
கொரோனா மையத்தில் மூதாட்டி கஸ்தூரியின் தொடர்பு எண்ணாக தனது மகளின் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார். போலீசார் அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது ‘அம்மா என்னை பார்க்க ஆட்டோ மூலமாக வந்து கொண்டிருக்கிறார்’ என சொல்லியுள்ளார் கஸ்தூரியின் மகள்.
கூடவே ஆட்டோ ஓட்டுநரின் செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார் அவர்.
உடனடியாக அந்த ஆட்டோ ஓட்டுநரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்த போலீசார் திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தவர்களை சென்னை கொண்டு வந்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் பகுதிக்கு வந்ததும் அந்த மூதாட்டி மீண்டும் தப்பியோடியுள்ளார்.
பின்னர் போலீசார் மீண்டும் மூதாட்டி கஸ்தூரியை கண்டுபிடித்து கொரோனா மையத்தில் சேர்த்துள்ளனர். கொரோனா தொற்றால் தான் இறந்து விடுவோமோ என்ற பயத்தில் தனது மகளை காண ஆட்டோவில் சென்றதாக கஸ்தூரி தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM