உத்தரபிரதேசத்தின் ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திர வர்மா (35 வயது). இவர் உடல் ஊனமுற்றவர். இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே ஜூலை 21ஆம் தேதி தெரிந்த ஒருவர் மத்தியபிரதேசத்தின் மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். புதன்கிழமை இரவு நோயாளியிடம் எந்த அசைவும் இல்லை. மறுநாள் காலையில் அவரிடமிருந்து துர்நாற்றம் வீசுவதை கவனித்த, பக்கத்து வார்டில் இருந்தவர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை காலை 8 மணியளவில் அவரது மரணம் குறித்த தகவலை போலீஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரித்தபோது வர்மா எப்போது இறந்தார் என மருத்துவமனை ஊழியர்களுக்கு தெரியாது என சிவில் சர்ஜன், டாக்டர் அசோக் குப்தா ஒத்துக்கொண்டார். இருப்பினும் செவிலியர்கள் அவருடைய மோசமான நிலைகுறித்து தெரிவித்ததாகக் கூறினார். மேற்சிகிச்சைக்காக அவரை தலைமையகம் குவாலியருக்கு மாற்றவேண்டும் என பரிந்துரைத்தோம். ஆனால் அதற்குள் இறப்பு நேரிட்டது என மருத்துவக்குழுவில் ஒருவர் தெரிவித்தார்.
அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுக்கமுடியாததால் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகே உறவினர்கள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். வர்மா உணவகங்களில் வேலைசெய்து வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார் என்றும், அவருடைய முதுகில் இருந்த ஒரு காயத்தில்தான் எறும்புகள் ஏறியிருந்தது என்றும் அவருடைய இறப்புக்கு பின்னர்தான் தெரிந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM