கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவை அடுத்துள்ள கடங்கலூரை சேர்ந்தவர்கள் நந்தினி- ராஜு தம்பதியினர். கூலித்தொழிலாளியான இவர்களின் முன்று வயது மகன் பிருத்விராஜ் கடந்த சனிக்கிழமை நாணயம் ஒன்றை விழுங்கியது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர், ஆலுவா அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்,
அங்கே “எக்ஸ்ரே எடுத்த மருத்துவர்கள் குழந்தையை, எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரைப்படி ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை சிறப்பு நிபுணர்கள் “எக்ஸ்ரே”யை ஆய்வு செய்ததில், குழந்தை விழுங்கிய நாணயம், குழந்தையின் மலக்குடலுக்குள் வந்து ஆசன வாயில் அருகே உள்ளது. தானாக வெளிவந்து விடும் அறுவை சிசிச்சை தேவையிலை என கூறியதாக தெரிகிறது. வீட்டிற்கு வந்த குழந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை, உடலில் அசவுகரியங்கள் தோன்றவே பதறியடுத்த பெற்றோர் குழந்தையை மீண்டும் ஆலுவா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மூன்று அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை புறக்கணிக்கப்பட்டதால் தான் குழந்தை இறந்தது என பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்து குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். குழந்தையின் கொரோனா முடிவுகளும் எதிர்மறையாக வந்த நிலையில் இன்று குழந்தையின் உடல், உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது குழந்தையின் வயிற்றில் ஒரு 1 ரூபாய் நாணயம் மட்டிமின்றி, மற்றொரு 50 பைசா நாணயம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் உடலை வாங்கிச் சென்ற பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொல்லம் புதுக்குளத்தில் உள்ள குழந்தையின் பாட்டியின் வீட்டில் இறுதிச்சடங்கு செய்தனர். இதற்கிடையில் குழந்தையின் இறப்புக்கான காரணம் குழந்தையின் உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் தடயவியல் சோதனை முடிவுகள் வந்தபின்பே தெரியவரும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.