புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காணொளி மூலம் நேற்று அளித்த பேட்டியில்,“புதுச்சேரி அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் மருத்துவ குழு கணக்குப்படி ஆகஸ்ட் 31 அன்று கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,000-மாக இருக்கும். அவர்களில் 2 ,000 பேர் சிகிச்சையில் இருப்பார்கள். அவர்களில் 600 முதல் 700 பேர் தீவிரமான கண்காணிக்கப்பட வேண்டியவர்களாக இருப்பார்கள். இதைக் கருத்தில் கொண்டு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருத்துவ கருவிகள் மற்றும் மருத்துவர், செவிலியர்கள், ஏ.என்.எம்கள், ஆஷா பணியாளர்களை நியமிப்பது சம்பந்தமாக கடந்த 31-ம் தேதி நடந்த கூட்டத்தில் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி எடுத்து வருகிறார்.

தமிழகத்தில் சித்த மருத்துவ முறையில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது. அதன்படி சென்னைக்கு சென்று சித்த மருத்துவமனையைப் பார்வையிட்டு எந்த முறையில் அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்து நம்முடைய மாநிலத்திலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நம்முடைய மருத்துவர்களிடம் உத்தரவிட்டிருக்கிறோம். புதுச்சேரியில் மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ மையம் இருக்கிறது.

இந்த மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவ மையத்தையும், புதுச்சேரி அரசு மருத்துவ மையத்தையும் ஒருங்கிணைந்து இங்குள்ள ஒரு மருத்துவமனையில் சித்தா முறையில் சிகிச்சை பெற விரும்பும் கொரோனா நோயாளிகளைத் தங்க வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அது வெகுவிரைவில் தொடங்கும். கொரோனா தொற்று பாதித்தவர்களில் பலர் சித்த மருத்துவம் மூலம் குணமடைந்து செல்கின்றனர். ஆகவே, புதுச்சேரியிலும் சித்த மருத்துவ முறையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கிறோம்.

மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிவித்திருக்கிறது. இந்தப் புதிய கல்விக்கொள்கை மக்கள் மத்தியில் பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது. கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி வேத பாடச்சாலை திட்டத்தைக் கொண்டு வருகின்றனர். குலக்கல்வியைக் கொண்டு வர விரும்புகின்றனர். கட்டாய மொழியாக மும்மொழித் திட்டம் வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டுமன்றி புதிய கல்வி கொள்கையானது வேலையை நோக்கி செல்கிறது என்று சொல்கின்றனர். ஆனால், அதை முழுமையாகப் படித்து பார்க்கும்போது மக்களுக்குப் பயன்படுகின்ற திட்டத்தை கொடுக்காததாக இருக்கிறது. வடமாநிலங்களைப் போன்று தென்மாநிலங்கள் இல்லை.

புதுச்சேரி சட்டப்பேரவை

புதுச்சேரி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே முழுமையான கல்வியறிவு பெற்ற மாநிலம். புதுச்சேரி மாநிலம் கல்வி கேந்திரமாக இருக்கிறது. நம்முடைய பாடத்திட்டங்கள், கல்வி கொள்கைகள் எல்லாம் வேலைவாய்ப்பை நோக்கிச் செல்கிறது. புதுச்சேரியைச் சேர்ந்த பல ஆயிரம் மாணவர்கள் மருத்துவம், பொறியியல், சமூகவியல் உள்ளிட்ட பல துறைகளில் தேர்ச்சி பெற்று பல துறைகளில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு நம்முடைய மாநிலத்தில் மட்டுமன்றி, மற்ற மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு கிடைத்து பயன் பெறுகின்றனர். இந்தப் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருவதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நான் நம்பவில்லை. ஆனால், மத்திய அரசானது இதற்கான நிதியை எங்கிருந்து கொண்டு வரப்போகின்றது. மாநிலங்களின் மீது சுமத்தப் போகிறார்களா என்பது தெளிவுப்பட கூறப்படவில்லை.

புதிய கல்விக் கொள்கை

இதுசம்பந்தமாக நடைபெற்ற கல்வியமைச்சர்கள் மாநாட்டில் அமைச்சர் கமலக்கண்ணன் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்து புதுச்சேரி மாநில அரசின் நிலையை தெளிவாகக் கூறியுள்ளார். எங்கள் மாநில அரசின் திட்டமானது இருமொழி கொள்கையாக இருக்க வேண்டும். தாய்மொழியாக தமிழும், இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்க வேண்டும். இந்தியை விருப்பப்பட்டால் படிக்கலாம் என்று கூறியுள்ளோமே தவிர இந்தியைக் கட்டாய பாடமாக ஆக்கக்கூடாது என்பது எங்கள் அரசின் கொள்கை.

அது மக்களின் விருப்பம். ஆகவே மத்திய அரசு இந்தியைத் திணிப்பதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். புதுச்சேரி மாநிலத்துக்கு என்று தனி பாரம்பர்யம் இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு என 5 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை நாம் மக்களுக்கு கொடுத்திருக்கிறோம்.

Also Read: `நாடாளுமன்றம் முழுக்க சாமியார் மடம் ஆகிவிட்டது’- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

ஏற்கெனவே பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த காலம் தொட்டு பிரெஞ்சு பத்திரங்கள், பிரெஞ்சு சட்டங்கள் நடைமுறையில் இருப்பதால் பிரெஞ்ச் மொழியையும் நம்முடைய ஆட்சி மொழியாக வைத்திருக்கிறோம். ஆகவே, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் புதுச்சேரி தனித்தன்மை வாய்ந்த மாநிலம். மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கையை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசின் சார்பில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மக்களின் கருத்துக்களைக் கேட்டு புதிய கல்விக் கொள்கை தொடர்பாக எங்களுடைய கருத்தை மத்திய அரசுக்கு தெரிவிப்போம். அது சம்பந்தமான விவாதத்தை அமைச்சரவையில் வைத்து பேச நடவடிக்கை எடுக்கிறோம். புதிய கல்விக்கொள்கை சம்பந்தமான விரிவான அறிக்கையைத் தயார் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டிருக்கிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.