புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நடந்து சென்ற நபர் மீது கார் மோதிய சம்பவத்தில், நடந்துசென்ற நபர் காருக்கு அடியில் சிக்கியது தெரியாமல் 3 கிலோ மீட்டர் தூரம் வரை அவரது உடல் காரால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தஞ்சை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காடவராயன்பட்டி என்ற இடத்தின் அருகே சாலையின் ஓரமாக தேவதாசன் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது தஞ்சையிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் விபத்துக்குள்ளானவர் கீழே விழுந்து விட்டதாக நினைத்து காரை ஓட்டி வந்த நபர் வேகமாக காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்றுள்ளார்.
அங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பழைய கந்தர்வகோட்டை சுங்க சாவடி பகுதியை அந்தக் கார் கடக்கும்போது காரில் இருந்து உயிரிழந்த நிலையில் தேவதாசன் உடல் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்துள்ளது. அப்போதுதான் தனது காரின் முன்புற பகுதியில் விபத்துக்குள்ளான நபர் சிக்கியிருந்தது காரின் ஓட்டுனருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காருடன் அங்கிருந்து அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சுங்கசாவடி அருகே தேவதாசன் சடலமாக நஞ்சு போய் கிடந்ததைக் கண்டு ஆத்திரமடைந்து சுங்கசாவடியை முற்றுகையிட்டனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கந்தர்வகோட்டை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அந்த இடத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க முப்பதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு இறந்து போன தேவதாசின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கந்தர்வகோட்டை சுங்கச் சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகி இருந்த காரின் நம்பரை வைத்து காரின் உரிமையாளரை தொடர்பு கொண்ட போலீசார், அவரை அழைத்து வந்து காரை பறிமுதல் செய்து இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.