வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்மேற்கு பருவமழை நாளை முதல் மிக தீவிரமடைய உள்ளது. கடலோர மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய உள்ளது. கேரளா, கர்நாடகாவிற்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.