ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஒரு பெண்ணுக்கு புதிய வீட்டைக் கட்டித் தருவதாக சோனு சூட் உறுதியளித்துள்ளார். ஜல்பைகுரி பகுதியில் மழையால் வீடு இழந்த பெண்ணுக்கு உதவுவதாக அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் ஒரு குடும்பத்தின் அவலநிலை பற்றி ட்விட்டரில் ஒரு நபர் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், அந்த பெண்ணின் குடும்பம் ஜல்பைகுரியில் உள்ளதாகவும், அவருடைய கணவர் இறந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிறுகுழந்தை இருப்பதாகவும், அதற்கு உணவளிக்கக்கூட வழியில்லாமல் இருப்பதாகவும் அந்த நபர் கூறியிருந்தார்.
மழையால் அவர்களின் துயரம் மேலும் அதிகரித்துவிட்டது. நீங்கள்தான் அந்த பெண்ணுக்கு கடைசி நம்பிக்கை. உங்களால் முடிந்தால் அந்த குடும்பத்தைக் காப்பாற்றுங்கள் சோனு சார் என்று அந்த நபர் நடிகர் சோனு சூட்டை டேக் செய்து ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த டிவீட்டிற்கு, ‘’இந்த ரக்ஷா பந்தன் நாளில் எங்கள் சகோதரிக்கு உதவுவோம். அவருக்கு ஒரு புதிய வீட்டைக் கட்டுவோம்’’ என சோனு சூட் பதிலளித்துள்ளார்.
சமீப காலமாக இவருடைய நற்செயல்களுக்காக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார். ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல பேருந்துகள், ரயில் வசதி மற்றும் விமான வசதிகளை செய்து கொடுத்துக்கொண்டு வருகிறார் நடிகர் சோனு சூட்.