மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலகட்டத்தில் மின் ஊழியர்களால் மின்கட்டண மதிப்பீடு செய்ய வர முடியாததால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை என மின்கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில் பிரபலங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வழக்கமான தொகையை விட மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளது என சர்ச்சை எழுந்தது.
ஆனால், சரியான முறையிலேயே மின்கட்டணம் கணக்கிடப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறையை முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி “கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு 10 இலட்ச ரூபாய் வழங்கப்படும். கூடுதல் நிவாரணம் கோரிய மனு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். டாஸ்மாக் பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய் தொற்று குறித்த சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.