இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை கிரிக்கெட் உலகின் பாகுபலி என சொல்லலாம். அவர் கிரீஸில் இருக்கும் கடைசி நொடி வரை இந்திய அணியின் வெற்றிக்காக பாடுபடுபவர். அப்படி பல போட்டிகளில் அவர் கடைசி வரை நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி தான் தோனி கடைசியாக விளையாடிய போட்டி. அதன் பிறகு அணியில் அவருக்கான இடம் கிடைக்காத சூழலில் அது குறித்த விவாதங்கள் அப்போதிலிருந்து அனல்பறக்க பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தோனி இந்தியாவுக்காக தனது கடைசி ஆட்டத்தை விளையாடிவிட்டார் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா.
அண்மையில் அவர் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.
‘எனக்கு தெரிந்த வரை தோனி அவரது கடைசி ஆட்டத்தை இந்தியாவுக்காக மகிழ்ச்சியுடன் விளையாடிவிட்டார் என கருதுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவரது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்காததால் தான் இது குறித்து விவாதிக்கிறோம். அவர் இது குறித்து என்ன நினைக்கிறார் என்பதை அவர் மட்டுமே சொல்ல முடியும். அதே போல எதிர் வரும் ஐ.பி.எல் தொடருக்கும் அவர் அணிக்குள் இடம் பிடிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. தோனி விளையாட தயாராக இருந்தால் அவரை தான் அணிக்குள் முதல் வீரராக நான் தேர்வு செய்வேன்’ என சொல்லியுள்ளார் நெஹ்ரா.