புதிய தயாரிப்பாளர் சங்கத்தை ஆரம்பிக்க இருப்பதாக பாரதிராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது. நாம் செயல்பட்டே ஆண்டுகள் ஆகிவிட்டன. பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக்குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம். தாய் சங்கத்தை உடைக்கவில்லை. இது செயல்படவேண்டிய காலகட்டம். கையை பிசைந்து கொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது?
அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து விபரம் பின்னர் அறிவிக்கப்படும். எனது தலைமையில் இன்றிலிருந்து உறுப்பினர் சேர்க்கை தொடங்குகிறது.இதை பிரித்தாள்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம். சில முக்கிய முடிவுகளுக்காக உழைக்க இருக்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.