சூரியனைச் சுற்றி ஏற்பட்ட ஒளி வட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதி பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
ஆவடியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டியது. இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென சூரியனைச் சுற்றிலும் ஒளி வட்டம் தோன்றியது. இதனால் சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்தது.
வட்டத்தின் விளிம்பில், வானவில் தோன்றும்போது ஏற்படும் நிறங்கள் சூழ்ந்திருந்தன. திடீரென வானில் இந்த மாற்றத்தைக் கண்டு ஆவடி பகுதியில் உள்ள பொதுமக்கள் பலர் தெருக்களில் திரண்டு இந்த அதிசய நிகழ்வைக் கண்டு ரசித்தனர்.
ஏராளமானோர் தங்கள் வீட்டு மாடிக்கு சென்று வானில் தோன்றிய இந்த ஆபூர்வ நிகழ்வை கண்டு ரசித்ததோடு தங்கள் செல்பேசியில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.