கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் பிரம்மாண்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகெங்கிலும் காணப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடுகளையும் பாதித்துள்ளது. இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் ஜெர்மனியில் பாதிப்பு குறைவுதான் என்றாலும் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விஷயங்கள் மக்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதனால் தலைநகர் பெர்லினில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் , கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை. ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்று கூச்சலிட்டனர்.
மாஸ்க் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் தங்களின் தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதங்கப்பட்டனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.