இந்தியாவின் மிகப்பெரிய கனவு திட்டமான சந்திரயான் 2 ஏவுகணை, நிலவில் தரையிறங்குவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன் தன்னுடைய தொடர்பை இழந்தது. ஆனால் சிதைந்த சந்திரயானின் லேண்டர் பாகத்திலிருந்து, ரோவர் பாகம் சில மீட்டர்கள் நகர்ந்திருக்கிறது என்பதை நாசாவின் படங்கள் மூலமாக ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார் சென்னையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் சண்முக சுப்ரமணியன்.
சந்திரயானின் லேண்டர் பாகங்கள் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள இவர், “தரையிறங்கும் இரண்டு நிமிடங்களுக்கு முன்பு சிதைந்துபோன சந்திரயானின் விக்ரம் என்ற லேண்டரில் இருந்து, பிரக்யான் என்ற ரோவர் சில மீட்டர் தூரம் நகர்ந்துள்ளது. மேலும் சிதைந்த சந்திரயான் ஏவுகணையின் ஆண்டனா, ரெட்ரோ பிரேக்கிங் எஞ்சின்கள், சோலார் தகடுகள் போன்ற பாகங்களையும் அடையாளம் கண்டுள்ளேன்” என்கிறார்
இதுபற்றி மேலும் கூறும் அவர் “நிலவின் தென்புலத்தில் இந்த பாகங்கள் இருப்பதால் இதனை தெளிவாக காணமுடியவில்லை. சந்திரயான் சிதைந்த சில நாட்களுக்கு இங்கிருந்து அனுப்பிய தகவல்களை லேண்டர் கருவி பெற்றிருக்கும், அந்த தகவல்களை ரோவருக்கும் அனுப்பியிருக்கும். ஆனால் அந்த தகவலுக்கான பதிலை அதனால் திருப்பி அனுப்ப முடியவில்லை” என்றார்
விக்ரம் லேண்டர் மூலமாக நிலவின் தென்புலத்தின் மேற்பரப்பில் காலடி வைத்த முதல் நாடு என்ற பெருமையை அடையும் கனவுடன் இந்தியா இருந்தது. நிலவின் தென்புலத்தில் உறைந்த பனிக்கட்டிகள் இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.